செயின்ட் லூசியா: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் சண்டிமாலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியின் இரண்டாவது நாள் மாலையில் சண்டிமால் பந்தை சேதப்படுத்தியதாக கூறி, போட்டியின் நடுவர்கள் மூன்றாம் நாள் காலையில் பந்தை மாற்றினர்.இதனால் கோபமடைந்த இலங்கை அணியினர் சுமார் 2 மணிநேரம் களத்திற்கு வராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அவர்கள் பந்து மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தனர். தாமதமாக களத்திற்கு வந்த காரணத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியின் முடிவில் விசாரணை நடத்தப்படும் என்று அன்றைய தினமே அறிவிக்கப்பட்டது.விசாரணைக்குப் பிறகு, சண்டிமால் போட்டியின் இரண்டாம் நாள் மாலையில், தனது பாக்கெட்டில் இருந்து ஒரு வகை இனிப்பு பொருளை தனது வாயில் போட்டு பின்னர் தனது எச்சிலை கொண்டு பந்தை சேதப்படுத்தியாக போட்டி நடுவர் ஸ்ரீநாத் ஐசிசிக்கு ரிப்போர்ட அளித்தார். ஐசிசி விதிமுறையின்படி இவ்வாறு சேதப்படுத்தவது குற்றம் ஆகும். இதையடுத்து சண்டிமாலுக்கு 2 சஸ்பென்ஷன் புள்ளிகள் வழங்கப்பட்டது. அதன்படி அவர் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டது.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மூன்றாவது போட்டியில் விளையாட மாட்டார். இது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும். அதேபோல, கேப்டன் சண்டிமால், இலங்கை அணி மேனேஜர் அசிங்கா குருசிங்கா மற்றும் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்க்கே ஆகியோருக்கு விளையாட்டின் விதிமுறைகளுக்கு மாறாக செயல் பட்டதால் (தாமதமாக களத்திற்கு வந்ததால்) சுமார் 4 முதல் 8 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்றும் தெரிகிறது.