கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதனால் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் பரவலாக அமலில் உள்ளது. விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலும் முடங்கி உள்ளன. கிரிக்கெட்டும் அதில் அடக்கம்.
கடைசி சர்வதேச போட்டி
கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி மார்ச் 13 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் இரண்டு மாதங்களாக ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி கூட நடைபெறவில்லை. ஐபிஎல் தொடரும் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடர் ரத்து ஆனால்..
ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐ அமைப்புக்கு சுமார் 4,000 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அமைப்பை பொறுத்தவரை ஏற்கனவே அந்த அமைப்பு நிதிச் சிக்கலில் தான் இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் நிலைமையை மோசமாக்கி உள்ளது.
இலங்கை அழைப்பு
அதனால், ஐபிஎல் தொடரை தங்கள் நாட்டில் நடத்த அழைப்பு விடுத்து இருந்தது இலங்கை. அதன் மூலம், தங்கள் நிதி நிலைமையை சமாளிக்க திட்டமிட்டது. ஆனால், பிசிசிஐ அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்தியாவில் லாக்டவுன் அமலில் இருக்கும் நிலையில், வீரர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதில் சிக்கல் உள்ளதை சுட்டிக் காட்டியது.
இலங்கை தொடர்
வரும் ஜூலை மாதம் இலங்கை சென்று இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ஆட முன்பு திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் அந்த தொடரிலும் இந்தியா ஆடுமா? என்ற சந்தேகம் உள்ளது.
இந்தியா வந்தால் தான்..
ஐபிஎல் போனாலும், இந்தியாவுடனான இருதரப்பு கிரிக்கெட் தொடராவது நடந்தால் தான் தங்கள் நிதி நிலைமையை சமாளிக்கலாம் என்ற நிலையில் உள்ளது இலங்கை கிரிக்கெட் அமைப்பு. அதனால், தாங்கள் இருதரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த தயாராக இருப்பதாக கூறி பிசிசிஐக்கு ஈமெயில் அனுப்பி உள்ளது.
தொலைக்காட்சி உரிமை விற்க முடியும்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இலங்கை சென்றால் தான் இலங்கை கிரிக்கெட் அமைப்பு குறைந்த பட்சம் தங்கள் தொலைக்காட்சி உரிமையை லாபகரமாக விற்க முடியும் என்பதே உண்மை நிலை. பிசிசிஐ-யின் பதிலுக்காக ஆவலாக காத்துக் கொண்டுள்ளது இலங்கை.
பிசிசிஐ முடிவு என்ன?
ஆனால், பிசிசிஐ அடுத்ததாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா செல்லவே திட்டமிட்டு வருகிறது. அதற்காக சுமார் இரண்டு மாதங்கள் வீட்டிலேயே இந்திய வீரர்கள் பயிற்சி செய்யத் துவங்கி உள்ளனர்.அதனால், இலங்கை தொடரை இந்தியா ரத்து செய்யவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.