பெங்களூரு அணி
கடந்த சீசனில் பரவாயில்லை என்றே சொல்லலாம். இந்த சீசனை பொறுத்தவரை 7 ஆட்டத்தில் விளையாடியுள்ள பெங்களூரு, 5-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. அதாவது முதல் நான்கு ஆட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பெங்களுரு, அதன்பிறகு மூன்று ஆட்டத்தில் இரண்டில் மண்ணை கவ்வியது. இந்த தொடரை பொறுத்தவரை பெங்களுரு அணிக்கு முதலாவது பகுதியில் விளையாடிய ஆடம் ஜாம்பா, கேன் ரிட்சன்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணத்துக்காக அணியில் இருந்து விலகி விட்டனர்.
ஹசரங்கா
இவர்கள் இருவருக்கு பதிலாக இலங்கை இலங்கை பவுலர்கள் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் சேர்க்கப்ட்டது குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் கோலி கூறுகையில், ' முதல் பாதியில் எப்படி விளையாடினேனோ, அதே ஆர்வம், மன உறுதியுடன் இரண்டாம் பாதியில் விளையாட வேண்டியது மிக முக்கியமாகும். எங்கள் அணியில் மாற்றம் செய்யப்பட்டு மாற்று வீரர்களாக சிலர் சேர்க்கப்பட்டுள்ளனர். மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்ட ஹசரங்கா, துஷ்மந்தா ஆகியோர் இலங்கையில் அதிகம் கிரிக்கெட் விளையாடி இருக்கின்றனர்.
புகழ்ந்த கோலி
இலங்கை ஆடுகளமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆடுகளமும் ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். இங்கு எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். அவர்களது திறமை அணிக்கு மிகவும் உதவி கரமாக இருக்கும். புதிய வீரர்களின் வருகை எங்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்துள்ளது. இன்னும் வலுவாக இருப்பதாக உணர்கிறோம்'' என்று கோலி கூறி இருக்கிறார். பெங்களுரு அணிக்கு புதிதாக வந்துள்ள இரண்டு பேரில் மிகவும் முக்கியமானவர் ஹசரங்கா.
யார் இந்த ஹசரங்கா?
சமீபத்தில் இலங்கையில் நடந்த இந்தியா-இலங்கை தொடரை பார்த்தவர்களுக்கு ஹசரங்கா யாரென்று தெரிந்து இருக்கும். இந்தியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்தான் இந்த ஹசரங்கா. அதுவும் மூன்றாவது டி20 போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்தார் ஹசரங்கா.
வெற்றி வீர்ர்
இலங்கை அணியை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை. முத்தையா முரளிதரன் என்னும் ஜம்பவான் தொடங்கி ரங்கனா ஹெராத் வரை பல்வேறு சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் நிறைந்துள்ளது. முத்தையா முரளிதரன் வரிசையில் ஹசரங்காவும் பல்வேறு சாதனைகளை படைப்பார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர். கோலி கூறியது போல் பெங்களுரு அணிக்கு ஹசரங்கா வெற்றியை தேடி தரும் வீரராக வலம் வர வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணிக்காக பல தொடர்களில் கோப்பைகளை வாங்கி கொடுத்த கோலியால் பெங்களூருவுக்கு ஒரு கோப்பையை பெற்றுத் தர முடியவில்லை. இந்த முறை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.