காயமடைந்த இலங்கை அணியினர்
கடந்த 2009ல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கினர். இதில் பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்த நிலையில், பல இலங்கை வீரர்கள் காயமடைந்தனர்.
பாகிஸ்தானுக்கு செல்லாத வீரர்கள்
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக பாகிஸ்தான் தனிப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு சென்று விளையாட எந்த நாட்டு வீரர்களும் அனுமதிக்கப்படவில்லை.
சர்வதேச போட்டிகளை நடத்தமுடியாத பாகிஸ்தான்
இந்நிலையில் சர்வதேச போட்டிகளை தன்னுடைய நாட்டில் நடத்த முடியாத நிலையில் பாகிஸ்தான் இருந்தது. பாகிஸ்தான் வீரர்களுடன் மற்ற நாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளும் யூஏஇ போன்ற பொதுவான இடங்களில் நடத்தப்பட்டு வந்தது.
சர்வதேச வீரர்கள் பங்கேற்ற லீக் போட்டிகள்
இந்நிலையில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் பங்கேற்ற சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் சர்வதேச வீரர்கள் பங்கேற்ற லீக் போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்பட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அங்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி, ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளை விளையாடியது. மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக செய்யப்பட்டதாகவும் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் சென்றது இலங்கை அணி
இந்நிலையில் அங்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளித்ததால், பாகிஸ்தானுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட இலங்கை அணியினர் தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ராவல்பிண்டியில் முதல் ஆட்டம்
10 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த நாட்டில் டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதற்காக இலங்கை அணியினர் தற்போது சென்றுள்ள நிலையில் ராவல்பிண்டியில் வரும் 11ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் கராச்சியில் வரும் 19ம் தேதி இரண்டாவது போட்டியும் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
பாகிஸ்தான் வந்த இலங்கை வீரர்களை வரவேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி வசீம் கான், இலங்கை அணியினர் பாகிஸ்தான் வந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று தெரிவித்துள்ளார். இலங்கை வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.