கொழும்பு:குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே. அண்மையில் தென் ஆப்ரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் இவரது அதிரடியால் இலங்கை அணி தொடரை வென்று சாதனைப் படைத்தது.
அதனை அடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருணாரத்னே இன்று அதிகாலை 5.15 மணியளவில் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கின்சி சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார்.
வெரல்லா பகுதியில் வந்தபோது, ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கருணாரத்னேவை கைது செய்தனர். அப்போது அவர் மதுக்குடித்திருப்பது தெரியவந்தது. பின்னர், கருணாரத்னே சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.