இலங்கை அணி
இலங்கை அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடர் முடிந்து அவர்கள் இலங்கை திரும்பிய உடனேயே இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து நாடு திரும்பிய இலங்கை வீரர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கோவிட் 19
இதில் இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபளவர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் நிரோஷனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு 2ம் கட்ட பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என கூறப்படுகிறது.
போட்டிகள் ரத்து?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் இலங்கையின் ஒட்டுமொத்த அணியும் கொரோனா காரணமாக குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இந்த போட்டிக்காக புதிய அணியை களமிறக்க இலங்கை வாரியம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் பிசிசிஐ அதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும், தொடரை வேண்டுமா என்று சிந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வருமானத்திற்கு ஆப்பு
ஒருவேளை இந்த தொடர் ரத்து செய்யப்பட்டால் இலங்கை வாரியத்திற்கு பெரும் இடியாக இருக்கும். கொரோனா காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்து செய்யப்பட்டதால் கடும் நிதி நெருக்கடியில் அந்நாட்டு வாரியம் உள்ளது. லங்கா ப்ரீமியர் தொடரும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் இந்திய அணியுடனான தொடர் மட்டுமே, முக்கிய வருமானமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடர் மூலம் சுமார் ரூ.87 கோடி வருமானம் கிடைக்கும். தற்போது அதற்கு கொரோனா ஆப்பு வைத்துள்ளது.