முதல் இன்னிங்ஸ்
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஓப்பனிங்கே சொதப்பியது. கேப்டன் ஷிகர் தவான் அதிரடியாக ஆட நினைத்து 13 ரன்களுக்கு நடையை கட்டினார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய அறிமுக வீரர் சஞ்சு சாம்சன் பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 74 ரன்களை சேர்த்தது.
அடுத்தடுத்த விக்கெட்
சஞ்சு சாம்சன் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களை எடுத்து அவுட்டானார். பிரித்வி ஷா 49 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 118 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து சற்று சரிவை சந்தித்த போது ஆட்டத்தின் 23வது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டத்தின் ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டது. மழை நின்றவுடன் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில்
சூர்யகுமார் யாதவ் மட்டுமே 40 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்ட்யா (19), மணிஷ் பாண்டே (11) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். இதனால் 43.1 ஓவர்களிலேயே இந்திய அணி 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இளம் படை போராட்டம்
47 ஓவர்களில் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு எதிராக தொடக்கத்திலேயே முதல் விக்கெட் எடுத்து அசத்தினார் அறிமுக வீரர் கிருஷ்ணப்பா கவுதம். ஓப்பனிங் வீரர் மினோத் பனுக்கா 7 ரன்களுக்கு நடையை கட்டினார். ஆனால் இதன் பின்னர் இந்திய அணிக்கு சாதகமாக அமையவில்லை. அவிஷிங்கா ஃபெர்னாண்டோ - பனுக்கா ராஜபக்ச ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இந்த ஜோடி 2வது விக்கெட்டிற்கு 109 ரன்கள் சேர்த்தனர்.
நம்பிக்கை கொடுத்த புதுமுகங்கள்
நீண்ட நேரமாக விக்கெட் கிடைக்காமல் இருந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் சேட்டன் சக்காரியா அடுத்தடுத்து 2 விக்கெட்களை எடுத்து நம்பிக்கை கொடுத்தார். இவரின் பந்துவீச்சில் பனுக்கா ராஜபக்ச (65), தனஞ்செயா டி சில்வா (2) ஆகியோர் வெளியேறினர். பின்னர் வந்த சரித் அசலங்கா (24), கேப்டன் தசுன் சனகா டக் அவுட்டானதால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை கிடைத்தது. எனினும் மறுமுணையில் தொடக்க வீரர் அவிஷிங்கா ஃபெர்னாண்டோ (76) அச்சுறுத்தல் கொடுத்ததால் இலங்கை அணி ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டிப்பிடித்தது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியுள்ளது.