டெல்லி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதியாக தலைவர் ஜக்மோகன் டால்மியாவுக்கு பதிலாக என்.சீனிவாசனே பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்கியது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியில் இருக்க சீனிவாசனுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதன் பின்னர் ஜக்மோகன் டால்மியா, கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
மேலும் என். சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் நாளை முதல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் போர்டு மீட்டிங் 26-ந் தேதி வரை பார்படாஸில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிரதிநிதியாக ஜக்மோகன் டால்மியாவுக்கு பதிலாக என். சீனிவாசனே பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதியாக சீனிவாசன் பங்கேற்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டும் வருகின்றன.
இது தொடர்பாக பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்ய வர்மா, ஜக்மோகன் டால்மியாவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.