நரேந்திர மோடி மைதானம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மோதேரா மைதானத்தில் நேற்றைய தினம் துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முன்னதாக புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் துவக்கி வைத்து நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்தார்.
குஜராத் அரசு விளக்கம்
இதையடுத்து வல்லபாய் படேல் பெயரில் செயல்பட்ட மைதானத்தை மோடி பெயருக்கு மாற்றியது குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மைதானத்தின் பெயர் மட்டுமே நரேந்திர மோடி மைதானம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் வளாகம் எப்போதும்போல படேல் பெயரிலேயே இயங்கும் என்றும் குஜராத் அரசு விளக்கம் அளித்துள்ளது.
பெயர் மாற்றம்
இதுகுறித்து குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் விளக்கம் அளித்துள்ளார். குஜராத் கிரிக்கெட் அசோசியேஷனின் கீழ் செயல்பட்டுவரும் இந்த மைதானத்தை புனரமைக்க முன்னதாக அதன் தலைவராக இருந்தபோது மோடி தான் முதலில் ஆலோசனை வழங்கியதாகவும் அதன் காரணமாகவே தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கிரஷ் ரிஜிஜூ விளக்கம்
இதே கருத்தையே மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தின் பெயர் மட்டுமே நரேந்திர மோடி மைதானம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். படேல் இறந்தபோது கூட அவருக்கு மரியாதை செலுத்தாத கும்பல் தற்போது இந்த பெயர் மாற்றம் குறித்து கதறுவதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அருணாச்சல் பல்கலைகழகம்
கடந்த 2007ல் அருணாச்சல பிரதேசத்தில் அழகான அருணாச்சல் பல்கலைகழகம் சோனியா காந்தியால் ராஜிவ் காந்தி யூனிவர்சிட்டி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் ராஜிவ் காந்தி பாலிடெக்னிக், இந்திரா காந்தி பூங்கா, ராஜிவ் காந்தி ஸ்டேடியம் என பட்டியல் நீள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.