பெங்களூரு ; ஐ.பி.எல். 2022ஆம் ஆண்டு தொடருக்கான ஏலம் அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. புதிய அணிகள் பங்கேற்பதால் மற்ற அணிகள் அதிகபட்சம் 4 வீரர்களை தக்க வைத்துவிட்டு, மற்றவர்களை விடுவிக்க வேண்டும்
இதனால் பழைய வீரர்களை தங்கள் அணியிலேயே தக்க வைத்து கொள்ள அணி நிர்வாகம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஏலத்தில் பங்கேற்றால் அதிக தொகை கிடைக்கும் என்று சில வீரர்கள் அணியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது அந்த பட்டியலில் இணைந்துள்ளார் பெங்களூரு அணி சுழற்பந்துவீச்சாளர் சாஹல். சாஹலை 4வது வீரராக 6 கோடி ரூபாய்க்கு தக்க வைத்து கொள்ள பெங்களூரு நிர்வாகம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் தனது அனுபவத்திற்கு 6 கோடி ரூபாய் குறைவு என்று முடிவு எடுத்துள்ள சாஹல், ஏலத்தில் பங்கேற்க முடிவு எடுத்துள்ளார்.
ரஷித் கானுக்கு பிறகு திறமையும், அனுபவமும் உள்ள சாஹலை மற்ற அணிகள் அதிக விலை கொடுத்து வாங்க காத்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய சாஹலை 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது பெங்களூரு அணி. பின்னர் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பெங்களூரு அணி மீண்டும் சாஹலை 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
தற்போது வரை 6 கோடி ரூபாய் பெறும் சாஹலை மீண்டும் அதே விலைக்கு எடுக்க பெங்களூரு அணி கேட்டுள்ளது தான் சாஹலின் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே சாஹலை தக்க வைத்து கொள்ள கடைசி கட்ட முயற்சியில் பெங்களூரு அணி இறங்கியுள்ளது. சாஹல் பெங்களூரு அணியில் உள்ளாரா இல்லையா என்று இன்று இரவு தெரிந்துவிடும்.
இதுவரைக்கும் 3 பேர் மட்டுமே செய்த உலக சாதனையை படைத்து அக்சர் பட்டேல் அசத்தல்..!!