கடும் சிக்கல்
2020 ஐபிஎல் தொடர் கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. முதலில் கொரோனா வைரஸ் பரவி வந்ததால் மார்ச் மாதம் நடக்க இருந்த தொடர் தள்ளி வைக்கப்பட்டது. பின் செப்டமபர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை தொடரை நடத்த முடிவு செய்தது பிசிசிஐ.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை
இதன் இடையே இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனையால் சீன நிறுவன விளம்பரதாரரான விவோ டைட்டில் ஸ்பான்சராக இருப்பதில் இருந்து விலகியது. இதை அடுத்து வேறு ஒரு நிறுவனத்தை தேடிப் பிடித்து ஸ்பான்சர் செய்ய வைத்தது பிசிசிஐ.
வெளிநாட்டில் ஐபிஎல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரை நடத்த முடியாது எனும் நிலையில், பாதிப்பு குறைவாக இருந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்த திட்டமிட்டது பிசிசிஐ. எட்டு ஐபிஎல் அணிகளும் ஒரு வாரம் முன்பு அங்கே சென்று முகாமிட்டன.
சிஎஸ்கேவில் கொரோனா
அங்கே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரண்டு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், மற்ற ஏழு அணிகளும் பயிற்சி செய்யத் துவங்கின. எப்படியும் ஐபிஎல் தொடர் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.
கொரோனா வைரஸ் பாதிப்பு
ஆனால், தற்போது தொலைக்காட்சி ஒளிபரப்பு குழுவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. ஸ்டார் குழுமம் தன் ஊழியர்களை ஆகஸ்ட் 31 அன்று துபாய் செல்லுமாறு அறிவுறுத்தி இருந்தது.
ஒளிபரப்பு குழு
ஆனால், சிஎஸ்கே அணியில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற உடன் ஒளிபரப்பு குழுவில் உள்ள அனைவரையும் கிளம்பும் முன் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய வைத்துள்ளனர். அதில் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி ஆகி உள்ளது.
பயணம் ரத்து
இதை அடுத்து அனைவரையும் பயணத்தை ரத்து செய்யுமாறு கூறி உள்ளது ஸ்டார் குழுமம். அனைத்து பணியாளர்களின் பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது.
18 நாட்களே உள்ளன
முன்பை விட தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பின் கட்டாயம் இருக்க வேண்டிய குவாரன்டைன் நாட்கள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் அங்கே செல்லவே கால தாமதம் ஆனால், பின் எத்தனை நாட்கள் குவாரன்டைன் இருப்பது? எப்போது பணிகளை துவங்குவது? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் செப்டம்பர் 18 துவங்க வேண்டும். அதற்கு 18 நாட்களே உள்ளன.
ஐபிஎல் தொடர் நடக்குமா?
ஒரு அணியில் பலருக்கு பாதிப்பு, ஒளிபரப்பு குழுவில் பாதிப்பு.. இதை எல்லாம் பார்க்கும் போது 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற கேள்வி எழுகிறது. அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் இருந்தால் மட்டுமே ஐபிஎல் நடக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன.