4,000 பேர் உயிரிழப்பு
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன.
ரசிகர்கள் ஏமாற்றம்
கொரோனா வைரசால் சர்வதேச அளவில் பல்வேறு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்டவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு விளையாட்டு தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பெருமளவில் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பிசிசிஐ அறிவிப்பு
விளையாட்டைவிட வீரர்கள், ரசிகர்கள், ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனிடையே, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு பின்னர் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா கூட்டாக அறிவித்துள்ளது.
விராட் கோலி அட்வைஸ்
இந்நிலையில், கொரோனா வைரசை வலிமையுடன் எதிர்கொள்ள கேப்டன் விராட் கோலி தனது டிவிட்டர் பக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடனும் கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வலியுறுத்தியுள்ளார். மேலும் வருமுன் காப்பதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
கே.எல்.ராகுலும் அறிவுரை
இதனிடையே, இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுலும், இந்த இக்கட்டான நேரத்தில் வலிமையுடனும் ஒருவருக்கொருவர் உதவியுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். சுகாதார வல்லுநர்கள் கூறியுள்ள வழிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.