சக வீரர்கள் குறித்து பாராட்டு
முன்னாள் பேட்ஸ்மேன் விவிஎஸ் லஷ்மன், டிவிட்டர் மூலம் தன்னுடைய கேரியரில் தன்னுடன் விளையாடிய சக வீரர்கள் குறித்து தான் பகிர்ந்துக் கொள்ளவுள்ளதாக நேற்று குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், தன்னுடன் விளையாடி தனக்கு உத்வேகம் அளித்த வீரர்களிடம் இருந்து தான் அதிகமாக கற்றுக் கொண்டதாகவும் கூறிய லஷ்மன், தன்னை பலப்படுத்திக் கொள்ள உதவிய சிலர் குறித்து இனிவரும் நாட்களில் தான் கூறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விவிஎஸ் லஷ்மன்
இந்நிலையில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் குறித்து விவிஎஸ் லஷ்மன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜாம்பவான்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சச்சின் டெண்டுல்கர், அதற்கான பாராட்டுக்கள், அதிகளவிலான ரசிகர்கள் கிடைத்தாலும் தன்னுடைய எளிமையை கைவிடவில்லை என்றும் அதுவே அவரது பிரத்யேக குணம் என்றும் விவிஎஸ் லஷ்மன் தெரிவித்துள்ளார்.
அனைவரும் பாராட்டு
மேலும் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் அவரது அன்பு குறையாமல் அவர் பார்த்துக் கொண்டதாகவும் அதனால்தான் அவர் அனைவராலும் தொடர்ந்து தற்போதுவரை பாராட்டப்பட்டு வருவதாகவும் லஷ்மன் மேலும் தெரிவித்துள்ளார். கடந்த 1989 நவம்பரில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய சச்சின் டெண்டுல்கர், அதே ஆண்டு டிசம்பரில் முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.
உலக கோப்பை அணியில் இடம்பிடிப்பு
மேலும் தன்னுடைய கேரியரில் அதிகமான சாதனைகளை புரிந்துள்ளார் சச்சின். சர்வதேச போட்டிகளில் 100 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களையும் குவித்துள்ளார். இந்தியாவிற்காக 6 உலக கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள சச்சின், கடந்த 2011 உலக கோப்பை வெற்றியின்போது அணியில் இடம்பெற்றிருந்தார்.