தடை நீக்க முயற்சி
தென்னாபிரிக்கா டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் உள்ளிட்ட மூத்த வீரர்கள் பந்து சேத விவகாரத்தில் சிக்கி ஓராண்டு தடை பெற்றனர். அந்த தடை இன்னும் முடிவடையவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் இவர்கள் தடையை நீக்க கடந்த மாதம் முதல் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.
தப்புக்கணக்கு
குறிப்பாக இந்திய அணி ஆடவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கு முன் ஸ்மித், வார்னர் தடையை நீக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணி இப்போது தோல்விப் பாதையில் செல்வதால் இந்திய அணிக்கு எதிராக ஸ்மித், வார்னரை வைத்து வெற்றி பெற்று விடலாம் என சிலர் கணக்கு போட்டனர்.
பந்துவீச்சுக்கு திட்டமிடல்
ஆனால், கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தடையை நீக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக எப்படி பந்து வீசலாம் என்ற திட்டமிடலில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
வலை பயிற்சி திட்டம்
ஸ்மித் மற்றும் வார்னரை வைத்து வலை பயிற்சியில் பந்து வீசிப் பார்த்தால் அது நல்ல பலன் தரும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அதையடுத்து, வார்னர் மற்றுன் ஸ்மித் இருவரிடமும் சம்மதம் வாங்கி உள்ளனர். அணியில் இடம் கிடைக்காத நிலையில் அணிக்கு உதவ தாங்கள் தயாராக இருப்பதாக கூறி இருவரும் வலை பயிற்சிக்கு வர உள்ளனர்.
3 பந்துவீச்சாளர்கள் யார்?
ஆஸ்திரேலிய பந்து வீச்சு கூட்டணியான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் மற்றும் பாட் கம்மின்ஸ் ஆகியோர் தான் இந்த சிறப்பு பயிற்சியில் ஈடுபடவுள்ள பந்துவீச்சாளர்கள்.
இது நல்ல விஷயம்
இது பற்றி பேசிய மிட்செல் ஸ்டார்க், "ஸ்டீவ் ஸ்மித்துக்கு வலையில் பந்து வீசுவது சிறப்பான விஷயம். அவர் உலகில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். நாங்கள் எப்படி பந்து வீசுகிறோம், பேட்ஸ்மேன் மனநிலையை சரியாக கணிக்கிறோமா? என்பதை அவரிடம் இருந்து தெரிந்து கொள்வது நல்ல விஷயம்" என்றார்.
முதல் டெஸ்ட் எங்கே?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6 முதல் அடிலெய்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி அதற்கு தயாராகும் வகையில் பயிற்சி போட்டியில் பங்கேற்றுள்ளது.