அணி ரெடி
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம், இலங்கைக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஆனால், இதில் கோலி அணி பரிதாபமாக தோல்வி அடைய, கிட்டத்தட்ட ஒன்றரை மாத இடைவேளைக்கு பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட ரெடியாகி உள்ளது.
சூர்யகுமார், ஷா
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் ஷர்மா, மாயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, அஷ்வின், ஜடேஜா, அக்ஷர் படேல், ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ரிதிமான் சாஹா, பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில், ஷுப்மன் கில் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி இருக்கும் நிலையில், அவர்களுக்கு பதில் இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ், ப்ரித்வி ஷா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நீடிக்கும் குழப்பம்
ஆனால், இலங்கை டூரில் க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவருடன் நெருக்கமாக இருந்த எட்டு வீரர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சூர்யகுமாரும், ஷாவும் அடக்கம். ஆகையால் அவர்கள் எப்போது இங்கிலாந்து சென்று இந்திய அணியுடன் இணைவார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. குழப்பமே நீடிக்கிறது.
டன் கணக்கில் வீசுவார்
இந்த நிலையில், ஆகஸ்ட் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப் போகும் வீரர்கள் யார் யார் என்பதில் அதன் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் ESPNCricinfo-விடம் பேசுகையில், "நான் மற்றவர்கள் சிந்திப்பது போல் அல்லாமல், வேறு மாதிரி சிந்திப்பதாகவும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற ஒருவர் இந்தியாவுக்கு மிகப்பெரிய வீரராக இருக்கும் போது, நாம் வேகப்பந்து வீச்சுக்கு சற்று மிகையாகவே முக்கியத்துவம் கொடுக்கிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும், ஸ்பின் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன். அஷ்வின் டன் கணக்கில் ஓவர்களை வீசும் வல்லமைப் பெற்றவர்.
திணறும் அணிகள்
"இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகள், வேகப்பந்துவீச்சு மற்றும் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த நிலைமைகளில் விளையாடுவதில் மிகவும் சிறப்பான அணிகளாகும். ஆனால், ஸ்பின் விளையாடுவதில் முனைப்பு காட்டுவதில்லை. எனவே, அஷ்வின் இந்தத் தொடரில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லும் மிகப்பெரிய டிரம்ப் கார்டாக இருக்கலாம். அதேசமயம், இங்கிலாந்து அணியால் ரிஷாப் பந்தை வெளியேற்றக்கூடிய ஒரு ஸ்பின்னரை அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா? எனவே இந்தத் தொடர் யார் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் என்பதை அறியும் போர்க்களமாக இருக்கலாம்" என்று ஸ்டெய்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆதிக்கம் இல்லை
உண்மையில், ஸ்டெய்ன் out-of-the-boxல் இருந்து யோசித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அஷ்வின் டிரம்ப் கார்ட் வீரராக விளங்கும் நிலை ஏற்பட்டால், இந்தியா கோப்பையை வென்றுவிடும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேசமயம், இங்கு ஒரு விஷயத்தை நாம் ஆராய வேண்டுமென்றால், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை குறிப்பிடும் SENA பகுதியில் அஷ்வின் அதிகம் ஆதிக்கம் செலுத்தியதில்லை.
ரசிகர்கள் ட்ரோல்
அதேசமயம், இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ரவிச்சந்திரன் அஷ்வின் உண்மையில் அசத்திவிட்டார் என்று தான் கூற வேண்டும். அதிலும், ஸ்டீவன் ஸ்மித்தை அவர் அவுட் செய்த விதமெல்லாம் வேற லெவல். அந்தளவுக்கு ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் ஆதிக்கத்தை வெளிப்படுத்தினார் அஷ்வின். அதை வைத்துப் பார்த்தோமெனில், ஸ்டெய்ன் சொல்வது நூற்றுக்கு நூறு இல்லையென்றாலும், நூற்றுக்கு தொண்ணூறாவது சரி என்றே சொல்லலாம். எனினும், ஸ்டெய்னின் இந்த பேட்டிக்கு பிறகு, இங்கிலாந்து ரசிகர்கள் பலரும் அஷ்வினை ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் அசர்ற ஆளா நம்மாளு!!