4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. 4வது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 4ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. 2வது மற்றும் 3வது போட்டியின் பிட்ச் குறித்த விமர்சனங்களை இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் வைத்து வருகின்றனர்.
ஸ்பின்னர்களுக்கு சாதகம்
குறிப்பாக நரேந்திர மோடி மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில், அந்த பிட்ச் ரவி அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ஜோ ரூட் ஆகிய ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
முன்னாள் வீரர்கள் விமர்சனம்
ஆயினும் இந்திய அணி இந்த போட்டியை இரு தினங்களில் முடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இந்நிலையில் அதே மைதானத்தில் 4வது போட்டியும் நடைபெறவுள்ளது. 3வது போட்டியை போலவே இந்த போட்டியும் அமைந்தால் இந்தியாவின் புள்ளிகளை குறைக்க வேண்டும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு ரிச்சர்ட்ஸ் அறிவுறுத்தல்
இந்நிலையில் இந்திய பிட்ச் குறித்து புலம்புவதையும் புகார் கூறுவதையும் விட்டுவிட்டு அந்த பிட்ச்சை எவ்வாறு எதிர்கொண்டு விளையாடுவது என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் யோசித்து செயல்பட வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகளின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
தயார்படுத்திக் கொள்ள வேண்டும்
இந்தியாவின் பிட்ச்கள் ஸ்பின்னர்களுக்கு சாதகமானது என்பதை அங்கு விளையாட போகும் முன்பாக வீரர்கள் உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.