ஆஷஸ்
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா நடுவேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவதில் ஆஸ்திரேலியாவும், 3வதில் மீண்டும் இங்கிலாந்தும் வெற்றிபெற்ற நிலையில், நாட்டிங்காம், டிரென்ட்பிரிஜ்ட் மைதானத்தில் தற்போது 4வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடந்து வருகிறது.
குக் முடிவு
டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். இங்கிலாந்தின் லீடிங் விக்கெட் டேக்கரான, ஆன்டர்சன் காயத்தால் அப்போட்டியில் பங்கேற்காத நிலையில், முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்துவிட்டாரே குக் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.
முதல் ஓவரிலேயே ஆதிக்கம்
2வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து இமாலய இலக்கை குவித்ததை நினைத்து பல இங்கிலாந்து ரசிகர்கள் குக்கிற்கு சாபமும் விட்டிருப்பர். ஆனால், ஆட்டத்தின் முதல் ஓவர் முதலே, ஆட்டத்தை இங்கிலாந்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. காரணம், ஸ்டூவர் பிராடின் அனல் பறக்கும் பந்து வீச்சு. முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய நம்பிக்கை நட்சத்திரம், கிறிஸ் ரோஜர்ஸ் மற்றும் உலகின் நம்பர் 1 டெஸ்ட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை பிராட் சாய்த்தார்.
இங்கிலாந்து அபாரம்
பிறகு முழுக்க, முழுக்க பிராடின் ராஜ்யமே அங்கு கொடிகட்டி பறந்தது. மொத்தம் வீசப்பட்ட 111 பந்துகளில் (18.3 ஓவர்கள்), 60 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது ஆஸ்திரேலியா. மொத்தம் மூன்றே பவுலர்களை கொண்டே இதை சாதித்தது இங்கிலாந்து.
பிராட் அபாரம்
ஸ்டூவர்ட் பிராட் தனது கனவு ஸ்பெல்லை 9.3 ஓவர்களில் முடித்தார். அதற்குள்ளாகவே வெறும் 15 ரன்களை விட்டுக்கொடுத்து, 8 விக்கெட்டுகளை சாய்த்தார். இதில் 5 மெய்டன்கள் அடங்கும். இந்த ஆட்டத்தின் முதல் விக்கெட்டை பிராட் சாய்த்தபோது, டெஸ்ட் அரங்கில் 300 விக்கெட்டுகளை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
டாப்-4 பவுலர்கள்
ஜேம்ஸ் ஆன்டர்சன்-413, இயான் போத்தம்-383, பாப் வில்லிஸ்-325 மற்றும் ப்ரெட் ட்ரூமேன்-307 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்தில் சிறந்த டாப்-4 பவுலர்களாக உள்ளனர். பிராட் நேற்றைய ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை சாய்த்து, ட்ரூமேனுடன் 4வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அடுத்த இன்னிங்சிலேயே அவர் 3வது இடத்துக்கு முன்னேற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
யுவராஜ்சிங் அதிரடி
2009ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில், இந்தியாவின் யுவராஜ்சிங், பிராட் வீசிய ஒரு ஓவரின் 6 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு உலக சாதனை படைத்தார். அந்த போட்டிக்கு பிறகு பிராட் அவ்வளவுதான், சர்வதேச கிரிக்கெட்டை விட்டே வெளியேற வேண்டியதுதான் என்று ஆரூடம் கணித்தனர்.
மீண்டு எழுந்த பிராட்
இந்நிலையில்தான், பிராட் தற்போது உலகின் முக்கிய பவுலராக உருவெடுத்துள்ளார். தோல்விகளில் இருந்து வெற்றிக்கான பாதையை உருவாக்கும் கலையை அவர் கற்றுத்தேர்ந்துள்ளார். இன்று ஆஷஸ் சாம்பியனாகியுள்ளார். ஆனால் 6 சிக்சர் அடித்த யுவராஜ்சிங் அதன்பிறகு தொடர்ச்சியாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ்சிங் மீண்டும் பார்முக்கு வந்து, பிராட் பந்துகளை சந்திக்க வேண்டும் என்பதே இந்திய ரசிகர்கள் ஆவல்.