மனவளம் அவசியம்
விளையாட்டு வீரர்கள் சோர்ந்து போகாமல், முன்பை விட திறனுடன் விளையாட மனவளத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், விளையாட்டுக்கு உடல் திறன் மட்டுமல்ல, மன வளமும் அவசியம் என்பதை வலியுறுத்தி சுப்பிரமணியம் பத்ரிநாத் "எம்ஃபோர்" (Mfore) என்ற அமைப்பை துவங்கி உள்ளார்.
மோசமான காலகட்டம்
அது பற்றி பேசுகையில் தான் 2015இல் கிரிக்கெட்டில் சந்தித்த மோசமான காலகட்டத்தை மனவள நிபுணர் மூலம் கடந்ததாக குறிப்பிட்டார். தான் கற்றதை, மற்றவர்களுக்கும் கற்பிக்கும் நோக்கில் இந்த அமைப்பை தொடங்கி உள்ளதாக கூறினார்.
வர்ணனை செய்வது எளிது
கிரிக்கெட் வீரராக களத்தில் ஆடி விட்டு, தற்போது வர்ணனை செய்து வரும் நிலையில், இரண்டுக்குமான வித்தியாசம் பற்றி கேட்ட போது, "வர்ணனை செய்வது ரொம்ப ஈஸி" என்றார் பத்ரிநாத். அதே சமயம், வர்ணனைசெய்யும் போது தானும் களத்தில் ஆடும் போது தவறு செய்துள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார்.
இளம் வீரர்களுக்கு
தற்போது கிரிக்கெட் ஆடி வரும் இளம் வீரர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என கேட்ட போது, கிரிக்கெட்டை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆட வேண்டும். பணத்திற்காக, வேறு ஏதோ ஒன்றிற்காக ஆடக் கூடாது. சரியான காரணத்திற்காக ஆட வேண்டும். அப்படி இல்லையென்றால் வேறு தொழிலை தேர்வு செய்வதே நல்லது என்றார்.
பேட்மேன் பத்ரிநாத்
தன் செல்லப் பெயர்கள் பற்றி பேசிய பத்ரிநாத், தன் நெருங்கிய நண்பர்கள் தன்னை பேட், பேட்மேன் என கூப்பிடுவார்கள். வெளிநாட்டு வீரர்கள் சிலர் என்னை பேட் ஏஸ் (Bad Ass) பத்ரிநாத் என அழைப்பார்கள். தோனி தன்னை பத்ரி என்றுதான் அழைப்பார் என்றார். சிஎஸ்கே அணி தன்னை மிஸ்டர். டிபென்டபிள் என அழைத்து வருவதாக கூறினார்.
மைக்கேல் ஹஸியை ஏன் பிடிக்கும்?
மைக்கேல் ஹஸியும் தானும் இயல்பிலேயே கிரிக்கெட் திறன் கொண்டவர்கள் இல்லை. கடும் உழைப்பை செலுத்தி கற்றுக் கொண்ட பின்னரே தாங்கள் கிரிக்கெட்டில் முன்னுக்கு வந்தோம். அதே போல, இருவரும் 29, 30 வயதில் தான் கிரிக்கெட்டில் மேலே வந்தோம், அறிமுகம் ஆனோம் என குறிப்பிட்டார் பத்ரிநாத்.
போட்டோகிராபி ஆர்வம்
தனக்கு போட்டோகிராபி கலையில் அதிக ஆர்வம் உண்டு எனக் கூறிய அவர், வைல்ட்லைஃப் போட்டோகிராபி தான் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறிய அவர், புலிகளை படம் பிடிக்க தனக்கு அதிக வாய்ப்பு கிடைத்ததாக கூறினார். டி20 கிரிக்கெட் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் போகும் என்றார் பத்ரிநாத்.
மறக்க முடியாத தருணங்கள்
தன் முதல் அறிமுகப் போட்டியில் சச்சின் தனக்கு அறிவுரை கூறியது, தோனி உடனான ஐபிஎல் பேட்டிங் பார்ட்னர்ஷிப், 2010இல் தரம்சாலா போட்டியில் தோனி அடித்த சிக்ஸ் ஆகியவை தன்னால் மறக்க முடியாத தருணங்கள் என்றார்.