தோனியை கைகாட்டிய சச்சின்
கடந்த 2007ல் ஐசிசியின் டி20 உலக கோப்பை தொடர் துவங்கப்பட்ட போது, அதில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் முடிவெடுத்தனர். இதுகுறித்து சச்சினிடம் பிசிசிஐ ஆலோசனை கேட்டபோது அவர் தயக்கம் ஏதுமின்றி தான் எம்எஸ் தோனியை கைகாட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
சச்சினை ஈர்த்த தோனி
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அந்த தொடரில் காயங்கள் காரணமாக தான் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், ஆனால் எம்எஸ் தோனியுடன் தான் தொடர்ந்து பீல்ட் அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் நடத்தியதால், கிரிக்கெட் குறித்த அவரது அறிவு தனக்கு தெரிந்ததாக கூறியுள்ளார்.
சச்சின் பெருமிதம்
போட்டிகளின்போது சரியான முடிவை எடுப்பதுடன் தன்னுடைய ஆலோசனைகளை பிறர் ஏற்கும்படி செய்யும் திறன் தோனிக்கு அதிகமாகவே இருந்ததாகவும், இருதரப்பினரும் ஒரே அலைவரிசையில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றும் தாங்கள் இருவரும் அப்படித்தான் இருந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இந்தியா ஜெயிக்க வேண்டும்
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மன், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகிர் கான் உள்ளிட்ட சீனியர்கள் அணியில் இருந்தபோதுதான் எம்எஸ் தோனிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், மற்றவர்கள் குறித்து தெரியாது என்றும் ஆனால் தனக்கு கேப்டனாகும் எந்த ஆசையும் இல்லை என்றும், இந்தியா பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியையும் ஜெயிக்க வேண்டும் என்று மட்டுமே தான் நினைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆலோசனைகளை வழங்கிய சச்சின்
ஒரு சிறப்பான அணி அமைய வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களது திறமையை சரியாக செயல்படுத்தி, கேப்டனின் பாரத்தை குறைக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டியுள்ள சச்சின் டெண்டுல்கர், தான் அவ்வப்போது, தன்னுடைய ஆலோசனைகளை தோனிக்கு வழங்குவேன் என்றும் தெரிவித்துள்ளார். அணியில் தன்னை மூத்த சகோதரராகவே அனைவரும் கருதி செயல்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.