ஒலிம்பிக்கில் சாம்பியன்
சீனாவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் சன் யாங், கடந்த 2012ல் லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கப்பதக்கமும், 2016ல் ரியோ ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கமும் வென்று சாதனை புரிந்தவர். ஆடவருக்கான 1500 மீட்டர் பிரீஸ்டைல் போட்டியில் அவர் உலக சாதனையும் படைத்துள்ளார். மேலும் உலக அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் வென்று தனது நாட்டிற்கு சிறப்பு சேர்த்தவர் சன் யாங்.
3 மாதங்கள் தடை
கடந்த 2014ல் இவர் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக ஊக்கமருந்து பயன்பாட்டிற்கு எதிரான அமைப்பால் குற்றம் சாட்டப்பட்டு, 3 மாதங்கள் தடை விதிக்கப்பட்டார். ஆனால் இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும், இதய படபடப்பை கட்டுப்படுத்துவதற்காக தான் பயன்படுத்திய மருந்தில் தடை செய்யப்பட்ட பொருள் இருந்ததாகவும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
ஒத்துழைக்காத சன் யாங்
இந்நிலையில் 28 வயதான சன் யாங், போட்டி இல்லாத காலத்திலும் ஊக்கமருந்து சோதனைக்கு உட்பட வேண்டும் என்ற விதிப்படி கடந்த 2018ல் அவரது வீட்டிற்கு மாதிரிகளை எடுக்க சென்ற ஊக்கமருந்து தடுப்பு குழுவினருக்கு ஒத்துழைக்காமல், தன்னுடைய மாதிரிகளை தர மறுப்பு தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
விளையாட்டு தீர்ப்பாயம்
விசாரணையில் சர்வதேச நீச்சல் சம்மேளனம் அவரை விடுவித்த நிலையில் உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் அப்பீலை அடுத்து, சுவிட்சர்லாந்தில் உள்ள விளையாட்டிற்கான தீர்ப்பாயம் சன் யாங் விளையாட 8 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து உலக மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிவந்த சன் யாங்கின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
சன் யாங் திட்டவட்டம்
இந்நிலையில், தான் எந்தவித தவறையும் செய்யவில்லை என்றும் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தான் அப்பீல் செய்ய உள்ளதாகவும், அதையடுத்து உண்மை வெளிவரும் என்றும் சன் யாங் கூறியுள்ளார். அவரது வழக்கறிஞர் கடந்த 28ம் தேதி சன் யாங்கின் வாழ்வில் கருப்பு தினம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.