சென்னை: இஷாந்த் தனது பவுலிங்கில் மேற்கொண்ட ஒரு மாற்றம் தான் அவருக்கு விக்கெட்டுகளை பெற்றுத் தருகிறது என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை டெஸ்ட் போட்டி பரபரப்பான இறுதி நாளில் அடியெடுத்து வைத்திருக்கிறது. 420 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இந்தியா, நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது.
முன்னதாக, இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த போது, டேனியல் லாரன்ஸ் 18 ரன்களில் இஷாந்த் ஓவரில் எல்.பி.டபிள்யூ ஆனார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் இஷாந்தின் 300வது டெஸ்ட் விக்கெட்டாகும்.
தனது 98வது போட்டியில் 300வது விக்கெட்டை கைப்பற்றிய இஷாந்த், இந்திய அணியில் 300 விக்கெட்டுகள் கைப்பற்றிய 6வது பவுலராகவும், 3வது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில், இஷாந்த் பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், 'இஷாந்த் தற்போது இன்னும் நிறைய பந்துகளை வீசுகிறார். முன்னதாக அவர் 18 இன்ச் குறைவாக பந்து வீசியிருக்கலாம். அது பார்க்க நன்றாக இருக்கும். ஆனால், அவரது விக்கெட் கணக்கை பார்த்தால் எதுவும் இருக்காது.
ஆனால், இரண்டு மூன்று வருடங்களாக அவர் மேற்கொண்டு வரும் மாற்றம் என்னவெனில், பந்தை உயரம் குறைவாக வீசுகிறார். இதனால், அவருக்கு எல்பிடபிள்யூ விக்கெட்டுகள் அதிகம் கிடைக்கின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.