முன்னாள் வீரர்கள் கருத்து
முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் பலரும் தோனி ஓய்வு குறித்து அவரே தான் முடிவு செய்ய வேண்டும் என்றும், பிசிசிஐ அவரிடம் ஓய்வு குறித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் தான் கூறி வருகின்றனர்.
உடைத்துப் பேசிய கவாஸ்கர்
இந்த நிலையில், முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் யாரும் சொல்லத் தயங்கும் ஒரு விஷயத்தை உடைத்துப் பேசி அதிர வைத்து இருக்கிறார். அந்த செய்தி இந்தியா டுடே இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
தோனி ஒதுங்கி விட்டார்
தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரில் பங்கேற்கவில்லை. அவராகவே இந்த தொடர்களில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது.
2020 டி20 உலகக்கோப்பை
சிலர் தோனி மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவார். 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி பங்கேற்பார் என கூறி வருகிறார்கள். தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது.
தேர்வு செய்வார்களா?
அதனால், தோனி எப்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. தோனி விரும்பினாலும், இந்திய அணியில் அவரை தேர்வு செய்ய மாட்டார்கள் என்று சிலர் கூறுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து தான். அதைத் தான் கவாஸ்கர் உடைத்துப் பேசி இருக்கிறார்.
எதிர்காலம்
ஆம், வெளியே பிடித்து தள்ளும் முன் தோனியாகவே கிளம்பிவிடுவார் என தான் நம்புவதாக கூறி இருக்கிறார் கவாஸ்கர். அவரது பேட்டியில் கூறிய சில முக்கிய விஷயங்கள் - "தோனி மனதில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. இந்திய கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் என்ன என்பதை அவர் தான் கூற வேண்டும்" என்றார்.
வயது ஆகிறது
மேலும், "அவருக்கு 38 வயது ஆகிறது என்பதால் இந்தியா அவருக்கு அடுத்து என்ன என்பதை பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில், அடுத்த டி20 உலகக்கோப்பை வரும் போது அவருக்கு 39 வயது ஆகி இருக்கும்" என்றார்.
மிகப் பெரிய பலன்
"அணிக்கான அவரது மதிப்பு எப்போதும் அட்டகாசமாக இருந்துள்ளது. அவர் எடுக்கும் ரன்கள் மட்டும் அல்ல, அவரது ஸ்டம்பிங் கூட. அவரது ஒட்டுமொத்த இருப்பு கேப்டனுக்கு அமைதியை அளிக்கிறது. கேப்டனும் அவரது ஆலோசனைகளால் பயன் பெறுகிறார். அது மிகப் பெரிய பலன்" என்றார்.
நேரம் வந்து விட்டது
மேலும், "இருந்தாலும், அவருக்கான நேரம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன். எல்லோருக்கும் ஓய்வு காலம் உள்ளது. அதை தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக, அவருக்கு முழு மதிப்பு அளித்து நான் நம்புகிறேன்" என்று தோனி ஓய்வு பற்றி கூறி இருக்கிறார்.
வெளியே தள்ளும் முன்..
மேலும், "வெளியே தள்ளும் முன் அவராகவே ஓய்வு பெறுவார் என நம்புகிறேன். அவரது விதிமுறைகளின் படி அவரே ஓய்வு பெற வேண்டும்" என்றும் கூறி அதிர வைத்துள்ளார் கவாஸ்கர். இந்திய அணி அவரை வெளியே தள்ளும் முன், அவரே ஓய்வை அறிவிக்க வேண்டும் என வெளிப்படையாக கூறி இருக்கிறார் கவாஸ்கர்.