இன்சமாம் உல் ஹக்
சுனில் கவாஸ்கர் ஓய்வு பெற்ற சில ஆண்டுகளுக்கு பின்னரே இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் சேர்ந்தார். 1992இல் பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை வென்ற பின்னர் இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது.
இங்கிலாந்து மண்ணில் இன்சமாம்
அப்போது இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்று இருந்தார். அவருக்கு அதிக அனுபவம் இல்லை. மேலும், இங்கிலாந்து மண்ணில் அதுதான் அவரது முதல் கிரிக்கெட் தொடர். அங்கே அவருக்கு பெரிய சிக்கல் காத்திருந்தது.
என்ன சிக்கல்?
வேகப் பந்துவீச்சாளர்களின் பவுன்சர்களை, ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறி இருக்கிறார் இன்சமாம் உல் ஹக். அப்படியே பாதி தொடர் வரை சென்று விட்டது. அப்போது சுனில் கவாஸ்கரை சந்திக்கும் வாய்ப்பு இன்சமாம் உல் ஹக்கிற்கு கிடைத்துள்ளது.
கவாஸ்கர் சந்திப்பு
அப்போது சுனில் கவாஸ்கர் ஒரு நிதி திரட்டும் போட்டியில் பங்கேற்றார். அதே போட்டியில் பங்கேற்க இன்சமாம் உல் ஹக்கும் சென்றார். அப்போது அவருடன் பேசிய இன்சமாம், தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன கவாஸ்கரிடம் தன் பிரச்சனையை கூறி இருக்கிறார்.
என்ன செய்வது?
ஷார்ட் பிட்ச் பந்துகளை சந்திப்பதில் தனக்கு பிரச்சனை இருப்பதாக கூறி உள்ளார். தான் என்ன செய்வது என்றும் கேட்டுள்ளார். அப்போது சுனில் கவாஸ்கர் முக்கிய ஆலோசனை ஒன்றை கூறி உள்ளார். அது மிகவும் சிறிய விஷயம் தான். ஆனால், அது இன்சமாம் கேரியரை காப்பற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்.
சிந்திக்காதே
எப்போதும் பேட்டிங் செய்யும் போது ஷார்ட் பந்துகளை, பவுன்சர்களை பற்றி சிந்திக்காதே, அதைப் பற்றி சிந்திக்கும் தருணத்தில் சிக்கிக் கொள்வாய் என கூறி உள்ளார் கவாஸ்கர். அதாவது ஷார்ட் பந்துகளை சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணம் தான் எதிரி என்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கவலைப் பட வேண்டாம்
பந்துவீச்சாளர் பந்தை வீசும் போது நமக்கு இயல்பாகவே அது ஷார்ட் பந்து என தெரிய வரும். எனவே, அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம் என கூறி உள்ளார் கவாஸ்கர். அதன்படி வலைப் பயிற்சியில் பவுன்சர் பந்துகளை மறக்க பயிற்சி எடுத்துக் கொண்ட இன்சமாம் அதன் பின் அந்த பிரச்னையில் இருந்து மீண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
புகழ்ந்தார்
"1992 முதல் நன் ஓய்வு பெறும் வரை நான் அந்தப் பிரச்சனையை மீண்டும் சந்திக்கவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார் இன்சமாம் உல் ஹக். கவாஸ்கரை அந்த உதவிக்காக புகழ்ந்த இன்சமாம், அவர் பேட்டிங் ஆடுவதை நேரில் காணும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததை பெருமையாக கருதுவதாக கூறி இருந்தார்.