பசியுடன் இந்திய அணி
இந்நிலையில், டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு சுனில் கவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சரிசமமான பலத்துடன் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்று வென்றுவிட்டதால், நியூசிலாந்துக்கு தான் வெற்றிவாய்ப்பு அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக எந்தவித கிரிக்கெட் போட்டியும் இன்றி பசியுடன் காத்திருக்கிறது இந்திய படை.
வேட்டையாட ரெடி
அப்படிப்பட்ட வேட்கையும் இருக்கும் இந்திய அணி புத்துணர்ச்சியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் களமிறங்கவுள்ளது. அதுமட்டுமல்ல, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய வீரர்கள் இருப்பதால், அவர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தருவார்கள்" என்று கூறியுள்ளார்.
ஏங்கும் வீரர்கள்
உண்மையில், சுனில் கவாஸ்கர் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை எனலாம். குறிப்பாக, அவர் கூறியிருக்கும் 'பசி' எனும் வார்த்தை மிக முக்கியமான அனலைசிஸ் எனலாம். அதாவது, கடந்த ஒரு மாதமாகவே இந்திய வீரர்கள் கடுமையான குவாரண்டைனில் இருந்து வந்தனர். இந்தியாவில் 14 நாட்கள், இங்கிலாந்தில் 10 நாட்கள் என்று அறைகளிலேயே முடங்கியிருக்க வேண்டிய நிலை. இதனால், எப்போது கிரிக்கெட் களத்தில் இறங்குவோம் என்று ஒவ்வொரு வீரர்களும் ஏங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அசுரத்தனம்
உளவியல் ரீதியாக இது ஒரு முக்கியமான காரணியாக பார்க்கலாம். ஸோ, இவ்வளவு நாட்களாக ஓய்வில் இருந்து சேமித்து வைத்திருந்த ஆற்றலை, அவர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அப்படியே வெளிக்காட்டுவார்கள். பவுலிங்கில் அசுரத்தனம் இருக்கும். பேட்டிங்கில் மட்டும் நிறுத்தி நிதானமாக தாக்குப்பிடித்துவிட்டால், நியூசிலாந்தை வீழ்த்திவிடலாம் என்பதே யதார்த்தம்.