இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, கடந்த ஜூன் மாதம், நியூசிலாந்துக்கு எதிராக சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஆனால், அதில் தோல்வியே மிஞ்சியது. இந்த போட்டிக்கு பின்னர் சுமார் 6 வாரங்கள் இடைவெளி கிடைத்ததால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
பயிற்சி போட்டிகள்
முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முதல் தர பயிற்சி போட்டியில் விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அந்நாட்டின் கவுண்டி அணிகளுடன் மோதியது.
அடுத்தடுத்து சரிவு
பயிற்சி போட்டிகளில் வீரர்கள் தீவிரமாக இருந்ததால், தொடரை எளிதாக கைப்பற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு ஆப்பு வைத்தது வீரர்களின் காயம். சுப்மன் கில்லுக்கு ஏற்கனவே இருந்த உள்காயத்தினால் அவர் வெளியேறினார். வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான் ஆகியோரும் காயமடைந்து வெளியேறினர். இதே போல சமீபத்தில் மயங்க் அகர்வாலும் முகத்தில் ஏற்பட்ட காயத்தினால் வெளியேறினார். இவர்களுக்கு மாற்றாக சூர்யகுமார் யாதவ் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சுனில் கவாஸ்கர் கணிப்பு
தொடர்ந்து அணியில் பாதிப்புகள் ஏற்பட்டதால், இந்த டெஸ்ட் தொடரை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், இந்த முறையும் எனது கணிப்பு வானிலையை பொறுத்து தான் இருக்கப்போகிறது. நான் 10 நாட்களுக்கு முன்னர் தான் இங்கிலாந்தில் இருந்து திரும்பினேன். அப்போது வானிலை சிறப்பாக இருந்தது. பல சமயங்களில் நன்கு வெயில் அடித்தது. சிறிதளவு தான் மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது. எனவே 5 டெஸ்ட் போட்டிகளின் 25 நாட்களில் 22 நாட்கள் வெயில் அடித்தால் கூட இந்திய அணி 4 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிடும்.
கோலி மிக முக்கியம்
நான் கணித்திருப்பது சரியாக இருக்க வேண்டும். அவற்றையெல்லாம் மீறி விராட் கோலியின் ஃபார்ம் மிக முக்கியமானது. கடந்த 2018ம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் வைத்திருந்த ஃபார்ம் மற்றும் ஷாட் தேர்வுகள் அற்புதமாக இருந்தது. இங்கிலாந்தின் மெயின் பவுலர் ஆண்டர்சனுக்கு தற்போது வயதாகி விட்டது. ஆனால் கோலிக்கு அனுபவம் கூடியுள்ளது என்று தான் கூற வேண்டும். எனவே விராட் கோலி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக ஆட வேண்டும், என கவாஸ்கர் அறிவுரை கூறியுள்ளார்.