காயம் காரணம்
ஐபிஎல்லின் கடந்த இரு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை. முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்ற அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றும் அவரது பிட்னஸ் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
ஆஸி தொடரில் பெயர் இல்லை
கடந்த 4 நாட்களாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பயிற்சிகளில் பங்கேற்று வருவதாகவும் அவர் அடுத்த போட்டியில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடரின் வீரர்கள் தேர்வு பட்டியலில் 3 வடிவங்களிலும் ரோகித்தின் பெயர் இடம்பெறவில்லை.
உண்மை நிலை வெளியிடப்பட வேண்டும்
ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பயிற்சிகளில் பங்கேற்கும் புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் ரோகித் சர்மாவின் பிட்னஸ் குறித்த உண்மை நிலை வெளியிடப்பட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிந்து கொள்ள அவரது ரசிகர்களுக்கு உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.
நீக்க அவசியம் என்ன?
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் துவங்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், ரோகித்தை அதிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், அவருக்கு என்னதான் காயம் ஏற்பட்டது என்றும் அவர் கேட்டுள்ளார்.
உண்மையை வெளியிட வேண்டும்
காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் பங்கேற்காத பஞ்சாப் அணி வீரர் மயங்க் அகர்வாலுக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் ரோகித்திற்கு இடம் அளிக்கப்படவில்லை. இதை சுட்டிக் காட்டிய சுனில் கவாஸ்கர், உண்மை தன்மையை தேர்வாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.