படுதோல்வி
இந்தியா - இங்கிலாந்து மோதிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3 - 1 என அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடிய நிலையில் கடைசி 3 போட்டிகள் ரன் குவிக்க மிகவும் திணறியது. குறிப்பாக கடந்த 112 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி ஒரு தொடரில் 4 முறை 150 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறையாகும்.
திணறல்
இங்கிலாந்து பேட்ஸ்மேனகளின் ரன் குவிப்புக்கு இந்திய ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் முட்டுக்கட்டையாக இருந்தனர். இங்கிலாந்து அணியில் பையோ பபுள் காரணமாக ஜாஸ் பட்லர், மொயின் போன்ற நட்சத்திர வீரர்கள் சொந்த நாடு திரும்பினர். இதனால் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் தவிர வேறு யாரும் அந்த அளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இங்கிலாந்து பாலிசி
இது குறித்து பேசியுள்ள கவாஸ்கர், இங்கிலாந்து அணியில் கொரோனா காரணமாக பின்பற்றப்படும் ரோட்டேஷன் பாலிசி முறையை புரிந்துக்கொள்வது கடினமாக உள்ளது. நாட்டிற்காக விளையாட நினைக்கும் வீரர்கள் எந்தவொரு கஷ்டத்தையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். நீங்கள் அதற்கு தயாராக இல்லையென்றால் எப்படி உங்களால் நாட்டிற்கு சிறப்பான பங்கை அளிக்க முடியும் என கேட்டுள்ளார்.
அனுபவம்
முன்பு எல்லாம் இந்தியா போன்ற அணிகளுடன் விளையாட இங்கிலாந்து அணியில் 5 - 6 வருட சர்வதேச அனுபவம் உள்ள வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் தற்போது இந்தியா - பாகிஸ்தான் போன்று இங்கிலாந்திலும் 17 வயது முதல் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இதன் விளைவாக தான் இந்த டெஸ்ட் தொடரில் டி.லாவ்ரன்ஸ். ஒல்லி போப், டாம் சிப்ளி போன்றோர் சிறப்பாக ஆடவில்லை. அவர்களுக்கு அனுபவம் இல்லை. ரூட்டால் மட்டுமே எவ்வளவு நேரம் போராட முடியும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.