இஷாந்த் சர்மா காயம்
காயம் காரணமாக கடந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத இந்திய பௌலர் இஷாந்த் சர்மா தொடரிலிருந்து இடையிலேயே வெளியேறினார். இதையடுத்து என்சிஏவில் தனது பிட்னசை அவர் நிரூபித்த நிலையிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை.
பகலிரவு டெஸ்ட்டில் தோல்வி
இந்நிலையில் நேற்று நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. மேலும் இந்த போட்டியின்போது பௌலர் முகமது ஷமிக்கு வலது கையில் பிராக்சர் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அடுத்த 3 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சைனி சரிப்பட்டு வரமாட்டார்
அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நவ்தீப் சைனி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வலிமையான பௌலிங்கை வெளிப்படுத்துவார் என்று தான் கருதவில்லை என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா வரவழைக்க வேண்டும்
மாறாக, ஷமிக்கு பதிலாக இந்திய பௌலர் இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா வரவழைத்து, குவாரன்டைனில் ஈடுபட செய்து, 3வது போட்டியில் பங்கேற்கும்வகையில் செய்ய வேண்டும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். அவர் நாளையே ஆஸ்திரேலியாவிற்கான விமானத்தை பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக அமையும்
இஷாந்த் மற்றும் ஷமி உள்ளிட்ட பௌலர்கள் இல்லையென்றால் அது ஆஸ்திரேலியாவிற்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். இஷாந்த் சர்மா ஒரு நாளில் 20 ஓவர்களை கூட வீசும் திறமை உள்ளவர் என்றும் அவர் பிட்டாக இருக்கும்பட்சத்தில் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வரவழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.