கொரோனா பாதிப்பு
ஐபிஎல் 2021 தொடரின் கேகேஆர் அணி வீரர்கள் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் விரித்திமான் சாஹா ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுதது தொடரை தள்ளி வைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்தது. முன்னதாக சிஎஸ்கே கோச்களுக்கும் கொரோனா பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்த கோரிக்கை
ஐபிஎல் 2021 தொடர் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களின் கோரிக்கையாகவும் உள்ளது. பிசிசிஐயும் இந்த தொடரை நடத்தும் முடிவுடனேயே உள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த தொடரை நடத்தும் சாத்தியங்கள் குறைவு என்பதும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமும் 4000 உயிரிழப்புகள்
கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள பாதிப்பால் இந்திய மக்கள் அதிகளவில் பாதிப்பில் உள்ளனர். தினந்தோறும் 3 லட்சத்திற்கம் அதிகமானோர் பாதிக்கப்படும் நிலையில் 4,000 பேர் உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர்.
கொரோனாவிற்கு நிதியுதவி
இதையொட்டி ஐபிஎல் அணிகளும் கொரோனா பாதிப்பிற்கு தொடர்ந்து நிதியுதவி மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றன. ஆர்சிபி கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் இணைந்து 2 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதுடன் நிதி திரட்டும் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
ரூ.30 கோடி நிதியுதவி
இந்நிலையில் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான சன் குழுமம் பல்வேறு என்ஜிஓக்களுடன் இணைந்து கொரோனா பாதிப்பிற்கு மத்திய மற்றும் மாநில அரசுக்கு உதவும்வகையில் 30 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகள் கூடுதலாக கிடைப்பதற்கு இந்த நிதி உதவி உதவும் என்று எதிர்பார்க்கலாம். குஜராத் பூகம்பம், புயல், சென்னை பெருவெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் சன் குழுமம் கணிசமாக நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.