காசியாபாத் : சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரருமான சுரேஷ் ரெய்னா மற்றும் பிரியங்கா தம்பதியினருக்கு இரண்டாவதாக இன்று ஆண்குழந்தை பிறந்துள்ளது.
இவர்கள் இருவருக்கும் கடந்த 2016ல் கிரேசியா என்ற பெண்குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக ஆண்குழந்தையை ஈன்றுள்ளார் பிரியங்கா.
இதையடுத்து சிஎஸ்கே தனது டிவிட்டர் பக்கத்தில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது. மேலும் குட்டி 'தல'க்கு விசில் போடு என்றும் கூறியுள்ளது. சுரேஷ் ரெய்னா தம்பதி தங்களுடைய முதல் குழந்தையுடன் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தவிர்க்க முடியாத வீரராக உள்ளார் சுரேஷ் ரெய்னா. அந்த அணியின் 3வது களவீரராக தொடர்ந்து இறங்கி அதிரடி காட்டி வருகிறார் இவர். இதுவரை 193 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5368 ரன்களை குவித்துள்ள ரெய்னா, சராசரியாக 33.34 புள்ளிகளை பெற்றுள்ளார்.
மேலும் இதுவரை நடைபெற்றுள்ள 12 ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை குவித்த வீரர்களில் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்த 2வது இடத்தில் உள்ளார் ரெய்னா. கோலி 177 போட்டிகளில் 5412 ரன்களை குவித்து சராரியாக 37.84 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2018ல் இங்கிலாந்திற்கு எதிராக ஹெட்டிங்லேவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக இறுதியாக பங்கேற்று விளையாடினார் ரெய்னா. இதேபோல, அதே ஆண்டு ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேச டி20 போட்டியில் இவர் இறுதியாக ஆடினார். இந்தியாவிற்காக 78 டி20 போட்டிகளில் விளையாடி 1604 ரன்களை அதிகபட்சமாக குவித்துள்ளார் ரெய்னா.
ஐபிஎல்லில் இந்த சீசனுக்காக கடந்த சில வாரங்களாக சென்னை சிதம்பரம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தார் ரெய்னா. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், பயிற்சியை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளார். தற்போது அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
இந்த கொண்டாட்டத்தை விசில் போட்டு கொண்டாடுமாறும், குட்டி 'தல'க்கு லவ் என்றும் சிஎஸ்கே டிவீட்டியுள்ளது. இதேபோல சிஎஸ்கே அணியில் விளையாடிவரும் ஹர்பஜன் சிங்கும் ரெய்னாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.