பொய் செய்தி
கடந்த நான்கு நாட்கள் முன்பு யூட்யூப் சேனல் ஒன்றில் சுரேஷ் ரெய்னா கார் விபத்தில் மரணமடைந்தார் என தலைப்பிட்டு பொய் செய்தி வீடியோ ஒன்று வெளியானது. இதை உண்மை என நம்பி லட்சக்கணக்கானோர் இதை பார்த்துள்ளனர். தற்போது சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது இந்த வீடியோ.
ஃபோட்டோஷாப் வேலை
இதன் வீடியோவின் முகப்பு படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டு உண்மை என நம்பும் வகையில் இருக்கிறது. இதை கண்டு தான் மக்கள் பலரும் ஏமாந்துள்ளனர். இந்த வீடியோவுக்கு கிடைத்த பார்வைகளை கண்டு மேலும் அதிக சேனல்களில் இதே செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
சுரேஷ் ரெய்னா அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ் ரெய்னா தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த பொய் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த வதந்தி தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
|
புகார்
கடவுள் அருளால் தான் நன்றாக இருப்பதாகவும், பொய் செய்தியை பரப்பி வரும் யூட்யூப் சேனல்கள் மீது புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார் ரெய்னா.
இடைவெளி
சுரேஷ் ரெய்னா தற்போது இந்திய அணியில் இடம் பெறுவதில்லை. அவர் அடுத்து ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக ஆட உள்ளார். இந்த இடைவெளியில் இந்தியா முழுதும் பிரபலமான அவர் பற்றி அதிக செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. இதை பயன்படுத்திக் கொண்டு வதந்தி பரப்பி சமூக வலைதளங்களில் அதிக பார்வையாளர்களை பெற்று வருகின்றனர் சிலர்.