இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் நீண்ட காலம் ஆடியவர். மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேனாக இடம் பிடித்து ஆடி வந்தார். தோனி கேப்டனாக இருந்த போது அணியில் மறுக்க முடியாத வீரராக வலம் வந்தார். பின்னர் கேப்டன்சி மாறிய போது அவரது நிலையும் மாறியது.
கடைசி வாய்ப்பு
2017 முதல் அணியில் இடம் பெற போராடி வந்தார். இடையே ஒருநாள் அணியில் நீக்கப்பட்டு, டி20 அணியில் மட்டும் இடம் பெற்று இருந்தார். கடைசியாக 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆடினார். அப்போது பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
வாய்ப்பு மறுப்பு
அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதன் பின் நடந்த 2019 ஐபிஎல் தொடரிலும் சுரேஷ் ரெய்னா பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. அதையடுத்து அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டதால் இந்திய அணியில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
ரெய்னா கேள்வி
தன்னை அணியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை தன்னிடம் யாரும் கூறவில்லை எனவும், தேர்வுக் குழுவினர் என்ன தவறு என சொன்னால் தான் அதை சரி செய்து மீண்டும் அணியில் இடம் பெற முடியும். ஆனால், அப்படி எதுவுமே சொல்லவில்லை என ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.
எம்எஸ்கே பிரசாத் பதில்
அதன் பின்னர் முன்னாள் தேர்வுக் குழு எம்எஸ்கே பிரசாத் சுரேஷ் ரெய்னாவுக்கு பதில் அளித்தார். அவர் கூறுகையில், தான் ரெய்னாவிடம் தனிப்பட்ட முறையில் பேசியதாகவும், எப்படி எதிர்காலத்தில் அணியில் இடம் பெறுவது என அவரிடம் விளக்கியதாகவும் கூறினார்.
ரெய்னா அதிரடி பதில்
இந்த நிலையில், சமீபத்தில் இணையத்தில் இர்பான் பதானுடன் உரையாடிய சுரேஷ் ரெய்னா, எம்எஸ்கே பிரசாத் தன்னை அணியில் இருந்து நீக்கிய பின் தன்னிடம் எதுவுமே பேசவில்லை என அதிரடியாக கூறி உள்ளார். மேலும், தனக்கான நேரம் வரும் போது தான் சிறப்பாக செயல்படுவேன் எனவும் பிரசாத்துக்கு பதில் கூறி உள்ளார்.
எல்லாமே பொய்யா?
எம்எஸ்கே பிரசாத் நீக்கத்துக்குப் பின் பேசியதாக கூறியதை சுரேஷ் ரெய்னா மறுத்துள்ளது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. எம்எஸ்கே பிரசாத் தன் அறைக்கு அழைத்தேன், பேசினேன் என சொன்னது எல்லாமே பொய்யா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதே புகார்
வீரர்கள் பலர் தங்களை நீக்கிய பின் தேர்வுக் குழு தங்களிடம் பேசவில்லை என கூறுவதும், அதற்கு எம்எஸ்கே பிரசாத் தான் பேசி விளக்கம் அளித்தேன் என கூறுவதும் புதிதல்ல. இதற்கு முன் முரளி விஜய், கருண் நாயர், கேதார் ஜாதவ் என பல வீரர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டுள்ளது.