இளையராஜா விவகாரம்
ஏற்கனவே தமிழகத்தில் இசை அமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஓப்பிட்டு பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது, இதனால் இளையராஜாவுக்கு எதிராக ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்தனர். இதற்கு பாஜக தேசிய தலைவர் நட்டாவே கண்டனம் தெரிவித்தார்.
ரெய்னா யோகி சந்திப்பு
இந்த விவகாரமே இன்னும் முடியாத நிலையில், தற்போது சுரேஷ் ரெய்னாவும் வசமாக சிக்கி கொண்டார். ஏற்கனவே ரெய்னா பிஜேபியுடன் நெருக்கம் காட்டுவதால் அவர் விரைவில் அக்கட்சியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று கிரிக்கெட் வீரர் ரெய்னா சந்தித்து பேசியுள்ளார்.
புகழ்ந்து தள்ளிய ரெய்னா
இந்த சந்திப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ரெய்னா, இன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். விளையாட்டு துறையில் வளர்ச்சி பெறுவது குறித்தும், மாநிலத்தின் வளர்ச்சி தொடர்பாகவும் தம்மிடம் முதலமைச்சர் பேசினார். நீங்கள் நன்றாக நலமுடன் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன். நம் மாநிலம் உங்கள் வழிகாட்டுதலில் இன்னும் முன்னேற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் எதிர்ப்பு
சுரேஷ் ரெய்னாவின் இந்த கருத்துக்கு தமிழக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சிஎஸ்கேவில் ரெய்னா இல்லை என்று நினைத்து இனிமேல் கவலைப்பட மாட்டோம் என்றும், இனி ரெய்னாவை பின் தொடர்வதை நிறுத்த உள்ளோம் என்று ரெய்னாவின் பதிவுக்கு கீழே தங்களது எதிர்ப்பை பதிவை செய்துள்ளனர். ஒரு சிலர் எல்லை மீறி ரெய்னாவை விமர்சனம் செய்துள்ளனர். பா.ஜ.க. தலைவர்களை வாழ்த்தி இளையராஜா போல் ரெய்னாவும் விமர்சனத்தில் சிக்கியுள்ளார்.