ரெய்னா உறவினர்கள் வீட்டில் தாக்குதல்
சுரேஷ் ரெய்னாவின் தந்தையின் சகோதரி ஆஷா ராணி பஞ்சாபில் பதான்கோட் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆகஸ்ட் 19 அன்று இரவு அவர்கள் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை கடுமையாக தாக்கினர்.
மாமா பலி
கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். கொடூர தாக்குதலில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மரணம் அடைந்தார். அவர் அரசு ஒப்பந்ததாரர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற குடும்பத்தினர் அனைவரும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
ரெய்னா இந்தியா திரும்பினார்
இந்த நிலையில், 2௦20 ஐபிஎல் தொடரில் பங்கேற்க துபாய் சென்ற சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். அவர் இந்தியா திரும்ப இந்த சம்பவமும் ஒரு காரணம் என கூறப்பட்டது. ரெய்னா இந்த சம்பவம் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு பஞ்சாப் அரசிடம் கேட்டுக் கொண்டார்.
மகனும் பலி
இதற்கிடையே கடும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அசோக் குமாரின் மகன் கௌஷல் குமார் மரணம் அடைந்தார். இதை அடுத்து இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பஞ்சாப் காவல்துறை. சிறப்பு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன.
துப்பு கிடைத்தது
இந்த நிலையில், பஞ்சாப் காவல்துறைக்கு இந்த வார துவக்கத்தில் ஒரு துப்பு கிடைத்தது. அதன்படி பதான்கோட் ரயில்நிலையம் அருகே உள்ள சேரிப் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கி இருப்பதாக தெரிய வந்தது. அந்த இடத்தை கண்காணித்து வந்தது காவல்துறை.
ரெய்டு
திட்டமிட்டு நடத்தப்பட்ட ரெய்டில் மூன்று கொள்ளையர்கள் சிக்கினர். அவர்கள் அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தான் என விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து சில பொருட்களையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
உருட்டுக்கட்டைகள்
இரண்டு தங்க மோதிரம், 1,530 ரூபாய் ஆகியவற்றுடன் இரண்டு உருட்டுக் கட்டைகளையும் கைப்பற்றி உள்ளது காவல்துறை. இது தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆதாரங்களுடன் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.
மற்ற கொள்ளையர்கள்?
எனினும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் வேறு இடங்களில் மறைந்துள்ளனர். அவர்களையும் கைது செய்தால் மட்டுமே இந்த வழக்கு முழுமையாக முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னரே பஞ்சாப் முதல்வர் வழக்கு முடிந்து விட்டதாக கூறி இருக்கிறார்.