சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா 2005இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். இடது கை பேட்ஸ்மேன் ஆன அவர், மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேன் ஆக அணிக்கு கை கொடுத்தார். தோனியின் கேப்டன்சியில் இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார்.
தோனி ஓய்வு
2018இல் கடைசி ஒருநாள் போட்டியில் ஆடி இருந்தார் சுரேஷ் ரெய்னா. அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாதது குறித்து அவர் வருத்தத்தில் இருந்தார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.
ரெய்னா ஓய்வு
தோனியின் நெருங்கிய வட்டத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா அவரது ஓய்வு அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தன் ஓய்வை அறிவித்தார். தோனி 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத நிலையில், தற்போது ஓய்வை அறிவித்தார்.
ரெய்னா பதிவு
தோனி போலவே தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை பதிவிட்டுள்ளார். "தோனி, உங்களுடன் ஆடியதில் மகிழ்ச்சி தவிர வேறு ஒன்றும் இல்லை. என் இதயம் முழுக்க பெருமையுடன் இந்த பயணத்தில் நானும் இணைகிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த்" என கூறி உள்ளார்.
ரசிகர்கள் அதிர்ச்சி
ரெய்னாவுக்கு 33 வயதே ஆகும் நிலையில், இந்திய அணியில் இடம் பெறும் வாய்ப்பு இருந்தும் அவர் ஓய்வை அறிவித்தார். அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தோனியின் முடிவால் ரசிகர்கள் பலர் கனத்த மனதுடன் இருந்த நிலையில், ரெய்னாவின் அறிவிப்பு அவர்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்தது.