முக்கிய வீரர்கள்
கடந்த பத்து ஆண்டுகளில் தோனி, சுரேஷ் ரெய்னா இருவரும் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர்கள். தோனி கேப்டனாக வியக்க வைக்கும் சாதனைகளை செய்துள்ளார். ரெய்னா அவரது நிழலாக பல ஆண்டுகள் இந்திய அணியிலும், சிஎஸ்கே அணியிலும் ஆடி வந்தார்.
தோனி நிலை
தோனிக்கு 39 வயது ஆகிறது. அவர் 2004 முதல் சுமார் 16 ஆண்டுகள் தீவிர கிரிக்கெட் ஆடி விட்டார். 2020 டி20 உலகக்கோப்பை தொடர் நடந்து இருந்தால் அதில் ஆட தோனி முயற்சி செய்து இருக்கலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் டி20 தள்ளி வைக்கப்பட்ட நிலையில், தோனி தன் ஓய்வை அறிவித்தார்.
ரெய்னா வயது
ஆனால், சுரேஷ் ரெய்னாவுக்கு 33 வயது தான் ஆகிறது. ஐபிஎல் தொடரில் இன்னமும் சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராகவே இருக்கிறார். அவரால் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற முடியும். அதற்கான வயது, நேரம், உடல்நிலை எல்லாமே அவருக்கு இருக்கிறது.
அதிர வைத்த ரெய்னா
எனினும், சுரேஷ் ரெய்னா தோனி வழியை பின்பற்றி தானும் ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர வைத்தார். அவரது ஓய்வு முடிவு ரசிகர்கள் மட்டுமில்லாமல் கிரிக்கெட் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா ஆகியோர் ரெய்னா ஓய்வு குறித்து தங்கள் கருத்துக்களை கூறி உள்ளனர்.
ஹர்பஜன் அதிர்ச்சி
ஹர்பஜன் சிங் இந்திய அணியில் மட்டுமில்லாமல் தற்சமயம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவுக்கு நெருக்கமாக ஆடி வருகிறார். அவர் சுரேஷ் ரெய்னா ஓய்வு தனக்கு அதிர்ச்சி அளித்ததாக கூறி உள்ளார்.
ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் தன் ட்விட்டர் பதிவில் கூறுகையில், "ரெய்னா ஓய்வு குறித்து அதிர்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்கு இன்னும் நீங்கள் நிறைய அளிக்கலாம் என்றே நினைக்கிறேன். அதற்கான வயது, உடற்தகுதி உங்களிடம் உள்ளது." என குறிப்பிட்டுள்ளார்.
ஓய்விற்கான நேரம்
"ஆனாலும், பலரும் கூறுவது போல, ஓய்விற்கான நேரம் வந்து விட்டதாக நீங்கள் உணர்ந்து இருக்கலாம். இரண்டாவது இன்னிங்க்ஸ்-க்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என ரெய்னா ஓய்வு பற்றி கூறி உள்ளார் ஹர்பஜன் சிங்.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா கூறுகையில், "கொஞ்சம் அதிர்ச்சியாகவே உள்ளது. ஆனாலும், உங்களுக்கு ஓய்வு பற்றிய உணர்வு வந்திருக்கலாம். நல்ல கேரியர் சகோதரா.. சிறப்பாக ஓய்வு பெறுங்கள். நாம் அணிக்குள் வந்த நேரத்தை இன்னமும் நினைத்துப் பார்க்கிறேன். வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஆடுவார்கள்
சுரேஷ் ரெய்னா, தோனி இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2020 ஐபிஎல் தொடரில் ஆட உள்ளனர். அது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. தோனி அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரிலும் ஆடுவாரா? அல்லது ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.