டெல்லி : கொரோனா வைரஸ் குறித்த தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
கூட்டம் அதிகமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க சுகாதார நிபுணர்கள் அளித்துள்ள ஆலோசனைகளை பின்பற்றவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சர்வதேச அளவில் 7,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உலகமே ஆட்டம் கண்டுள்ளது. மக்கள் மற்ற எதைப்பற்றியும் சிந்திக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பலர் தங்களது சொந்தங்களை இழந்து பரிதவித்து வருகின்றனர். உலகெங்கிலும் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் வரும் 29ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து வீரர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்திய துவக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா, தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனாவை வெற்றி கொள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து அறியவந்தால், உடடினயாக மருத்துவ ஆலோசனையை பெறவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவும் தனது டிவிட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த பதிவை வெளியிட்டுள்ளார். கொரோனா குறித்த தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டம் அதிகமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை பின்பற்றி கொரோனா பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.