பயிற்சி கேம்ப்
ஐபிஎல் 2020 தொடரில், முதன் முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த தோனி பாய் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனில் விட்டதை பிடிக்கும் முடிவோடு உள்ளது. இதற்காக கேப்டன் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் ஏற்கனவே சென்னை வந்துவிட்டனர். தவிர, என்.ஜெகதீசன், சாய் கிஷோர், ஹரி நிஷாந்த் ஆகியோரும் பயிற்சி கேம்ப்பில் உள்ளனர்.
கோச் ஸ்டீபன் ஃபிளமிங்
இந்நிலையில், வீரர்கள் இப்போது ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகள் முடிந்த பிறகு மார்ச் 9ம் தேதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள் என்றும் சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். கோச் ஸ்டீபன் ஃபிளமிங் உள்ளிட்ட இதர முக்கிய நிர்வாகிகள் மார்ச் 18 அன்று அணியோடு இணைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம்
ஜடேஜா குறித்த கேள்விக்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், "கட்டைவிரல் காயம் காரணமாக ஜடேஜா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். இதனால், ஏப்ரல் மாதம் அவர் சிஎஸ்கே முகாமில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
மர்மமென்ன?
கடந்த 2020 சீசனில் சிஎஸ்கேவின் தோல்விக்கு சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. தொடரில் கலந்து கொள்ள துபாய் வரை சென்ற ரெய்னா, திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து நாடு திரும்பினார். 'விலகிச் சென்றதன் மர்மமென்ன?' என்று தில்லானா மோகனாம்பாள் மியூஸிக்கில் கேட்டும், இதுவரை தெளிவான பதில் யாருக்கும் கிடைக்கவில்லை.
பால்கனி மேட்டர்
சிலர், அவரது குடும்பத்தினர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதால் தொடரில் இருந்து வெளியேறினார் என்றும், சிலரோ, துபாய் ஹோட்டலில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பால்கனி இல்லாததால் வெளியேறியதாகவும் காரணம் கற்பித்தனர். எனினும் மெஜாரிட்டி காரணம் 'பால்கனி' மேட்டராகத் தான் இருந்தது.
மீண்டும் கோச்சிக்கப் போறார்
இந்நிலையில், அடுத்த வாரம் சுரேஷ் ரெய்னா, பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வரவிருப்பதாக காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இதனால், 'மறந்து, கிறந்து அவருக்கு பால்கனி இல்லாத ரூம் கொடுத்துடாதீங்க.. மறுபடியும் கோச்சிக்கிட்டு போயிடப் போறார்' என்று ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.