அபுதாபி: டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்துள்ள சூர்யகுமார் யாத மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடர்ந்து ஐபிஎல்-ல் சொதப்பி வருவது சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்.19ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், இன்று (செப்.23) ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்ய, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, குயின்டன் டி காக் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ரோஹித் ஷர்மா 33 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது சுனில் நரைன் ஓவரில் கேட்ச் ஆனார். இதையடுத்து ஒன் டவுன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வெறும் 5 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷனும் 14 ரன்களில் ஃபெர்கியூசன் ஓவரில் கேட்ச்சாகி வெளியேறினார். இப்போது சிக்கல் என்னவெனில், சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் என இருவரும் அடுத்த மாதம் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஆனால், இருவரின் ஐபிஎல் செயல்பாடுகளும் தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் வெறும் 3 ரன்களில் அவுட்டான சூர்யகுமார் யாதவ் இன்றைய போட்டியில் 5 ரன்களில் அவுட்டாகியுள்ளார். எத்தனை விக்கெட்டுகள் விழுந்தாலும், அணி என்ன ஸ்கோர் அடித்திருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது ஸ்டைலில் பந்துகளை விளாசுபவர் சூர்யகுமார் யாதவ். ஆனால், அவரால் கடந்த இரு போட்டியிலும் டபுள் டிஜிட் ரன்களை எட்ட முடியவில்லை.
3 முறை தொடர்ந்து ஒரே தவறு.. பஞ்சாப் அணியை வளர்த்துவிட்ட ராஜஸ்தான்.. கடின இலக்கை எளிதாக துரத்தியது!
இதே சிக்கல் தான் இஷான் கிஷனுக்கும். இன்னும் சொல்லப்போனால், இதே ஐபிஎல் தொடரில் 422 ரன்களுடன் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஷிகர் தவானுக்கு பதில், இந்திய அணியில் சேர்க்கப்பட்டவர் இவர். இந்திய அணி நிர்வாகம் அவர் மீது அத்தனை நம்பிக்கை வைத்திருந்தது. தவானுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 11 ரன்களில் அட்டமிழந்த இஷான், இன்று கொல்கத்தாவுக்கு எதிராக 14 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷிகர் தவான் ரன்களை குவித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் அணியில் சேர்க்கப்பட்ட இளம் வீரர்களான சூர்யகுமார் மற்றும் இஷான் கிஷன் சொதப்பிக் கொண்டிருக்க டி20 உலகக் கோப்பையில் என்ன கூத்து நடக்கப் போகிறதோ!