டெல்லி : மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் மிகச்சிறப்பாக விளையாடுவதாகவும் அவருக்கான நேரம் கூடிய விரைவில் வரும் என்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லின் இந்த சீசனில் மட்டுமின்றி கடந்த சீசன்களிலும் சூர்யகுமார் யாதவ் சிறப்பான போட்டிகளை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் சூர்யகுமார் பெயர் இடம்பெறாதது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2020 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ் இதுவரை விளையாடியுள்ள 14 போட்டிகளில் 410 ரன்களை அடித்துள்ளார். இதன் சராசரி 41. இந்நிலையில் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் சூர்யகுமார் பெயர் இடம்பெறாதது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
என்னங்க நடக்குது.. காயம்னு சொல்றீங்க... விளையாடுறாரு... பிசிசிஐ நடவடிக்கை வேணும்!
இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலையிட்டு சிறப்பான தீர்வை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுகுறித்து வாய் திறந்துள்ளார். சூர்யகுமார் யாதவ் சிறப்பான வீரர் என்றும் அவருக்கான நேரம் கூடியவிரைவில் வரும் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஐபிஎல் சீசனில், சூர்யகுமாருடன், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவர்த்தி, சுப்மன் கில், தேவ்தத் படிக்கல் ஆகிய வீரர்களின் ஆட்டம் தன்னை கவர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.