ஐபிஎல் ஆட்டம்
2020 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடினார். அவரது ஆட்டத்தை பார்த்த முன்னாள் வீரர்கள் பலர் இவருக்கு ஏன் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பி வந்தனர்.
அணியில் வாய்ப்பில்லை
இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அது அப்போது பெரிய சர்ச்சையாக வெடித்தது. சூர்யகுமார் யாதவ் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடி வரும் நிலையில் அவருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
காரணம் கோலியா?
கேப்டன் விராட் கோலி மும்பை இந்தியன்ஸ் வீரர் என்பதால் சூர்யகுமார் யாதவ்வை புறக்கணித்து இருப்பதாக ரசிகர்கள் சிலர் குற்றம் சுமத்தினர். ரோஹித் சர்மா விவகாரமும் அப்போது வெடித்தது. அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஒதுக்கப்படுவதாக விமர்சனம் எழுந்தது.
ரோஹித் சர்மா நீக்கம்
ஆஸ்திரேலிய தொடரில் முதலில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. அவருக்கு இருந்த தசைப்பிடிப்பை காரணமாகக் காட்டி அவரை மூன்று அணிகளில் இருந்தும் நீக்கி இருந்தது பிசிசிஐ. அப்போது மும்பை இந்தியன்ஸ் வீரர்களை அணியில் சேர்க்கவில்லை என்ற விவாதம் எழுந்தது.
அந்த போட்டி
அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சந்தித்தது. அப்போது ரோஹித் சர்மா காயம் காரணமாக அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. சூர்யகுமார் யாதவ் அந்தப் போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி மும்பை அணியை தனி ஆளாக வெற்றி பெற வைத்தார்.
சீண்டல்
அந்தப் போட்டியில் சுர்யகுமாரை அவுட் ஆக்க முடியாமல் தவித்த கேப்டன் கோலி, இடையே அவரை சீண்டினார். அதற்கு பதிலடி கொடுத்த சூர்யகுமார் அவரை முறைத்துப் பார்த்தார். போட்டியின் முடிவில் தான் இங்கேயே நிற்கிறேன் என சொல்லிக் காட்டினார்.
எதிர்ப்பு
கோலிக்கு களத்தில் வைத்தே எதிர்ப்பு காட்டிய சூர்யகுமார் யாதவ்வின் செயல் அப்போது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஆனால், விராட் கோலி ரசிகர்கள் அவரை கண்டித்தனர். இந்த நிலையில், தானாக சர்ச்சையில் சிக்கி உள்ளார் அவர்.
|
மாஸ்டர் பட மீம்
நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் பட டீசர் சில நாட்கள் முன்பு வெளியானது. அதில் வரும் காட்சி ஒன்றில் தனி ஆளாக மொத்த கூட்டத்தையும் விஜய் பயப்பட வைப்பதாக ஒரு காட்சி இருக்கும். அதை வைத்து ரோஹித் சர்மாவை கண்டு விராட் கோலி, பிசிசிஐ தேர்வுக் குழு மற்றும் ரோஹித் எதிரிகள் அஞ்சுவதாக மீம் போடப்பட்டு இருந்தது.
ரசிகர்கள் கோபம்
அதில் கேப்டன் கோலி என்பதற்கு பதிலாக பேப்பர் கேப்டன் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த சர்ச்சையான மீமை சூர்யகுமார் யாதவ் ட்விட்டரில் லைக் செய்து இருக்கிறார். அதைக் கண்ட ரசிகர்கள் பலர் அவர் மீது கோபம் அடைந்தனர். பேப்பர் கேப்டன் என கோலியை கிண்டல் செய்த மீமை ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் எப்படி லைக் செய்யலாம் என விமர்சனம் செய்துள்ளனர்.
வாய்ப்பு கிடைக்குமா?
சிலர் சூர்யகுமார் யாதவ் ஐபிஎல்-ஐ தாண்டி எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆட தகுதி இல்லாதவர் என கூறி உள்ளனர். பிசிசிஐ, கோலி ஆகியோரை கிண்டல் செய்யும் மீமை லைக் செய்துள்ள நிலையில் அவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது அவர் அந்த மீமை அன்லைக் செய்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.