வெற்றிகளுக்கு காரணமான யாதவ்
ஐபிஎல் 13வது சீசன் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி முன்னிலையில் உள்ளது. அணி சார்பில் துவக்க வீரராக விளையாடிவரும் சூர்யகுமார் யாதவ், அந்த அணியின் வெற்றிகளுக்கு காரணமாக உள்ளார்.
79 ரன்களை குவித்து அபாரம்
கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 47 பந்துகளில் 79 ரன்களை குவித்து, அணியின் எளிதான வெற்றிக்கும் அவர் காரணமானார். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக தான் உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருவதாகவும் ஆனால் தனக்கான அங்கீகாரம் இந்திய அணியில் கிடைக்கவில்லை என்றும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யகுமார் ஆட்டம் குறித்து புகழ்ச்சி
இதே கருத்தை முன்னாள் வீரர் இர்பான் பதானும் வெளியிட்டுள்ளார். சிறப்பான வீரர் சூர்யகுமார் யாதவிற்கு இந்திய அணியில் இடம்கிடைக்காதது ஏமாற்றத்தை அளிப்பதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதேபோல, முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இதே கருத்தை வெளியிட்டுள்ளார்.
கண்ணைமூடி பின்பற்றுகிறேன்
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித்தின் அறிவுரைகளை தான் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றுவதாக சூர்யகுமார் தெரிவித்துள்ளார். ரோகித்துடன் பேசும் ஒவ்வொரு சமயத்திலும் தான் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். சின்ன சின்ன விஷயங்களில்கூட ரோகித் சிறப்பாக உதவுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.