இந்திய அணி நிலைமை
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராவதற்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் இதில் இந்தியா வெற்றி பெற்ற போதிலும், இந்தியாவுக்கு இருக்கும் பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது பேட்டிங்கில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வும், பவுலிங்கில் செய்ய வேண்டிய மாற்றங்களும் தெரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பேட்டிங் வரிசை
இந்திய அணியின் பேட்டிங்கில் முதலில் கே.எல்.ராகுல் பற்றி பேச வேண்டும். காயத்தில் இருந்து குணமடைந்து வந்த அவர் ஆசிய கோப்பையில் மோசமாக சொதப்பினார். இதனால் அவர் இனியும் அணிக்கு தேவையா என்ற விமர்சனங்கள் குவிந்தன. இந்த இக்கட்டான சூழலில் தான் கே.எல்.ராகுல் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். முதல் போட்டியில் அவர் அடித்த அதிரடி அரைசதம், உலகக்கோப்பைக்கு அவர் தகுதியானவர் தான் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க தொடரில் அது உறுதியாகிவிடும்.
கோலி நம்பிக்கை
ஆசிய கோப்பை தொடரில் ஃபார்முக்கு திரும்பிய விராட் கோலி, ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20ல் 2 ரன்களுக்கு வெளியேறியது அதிர்ச்சியை கொடுத்தது. எனினும், தான் இன்னும் அதே ஃபார்மில் தான் இருக்கிறேன் என 3வது டி20ல் அடித்த அரைசதம் மூலம் உணர்த்திவிட்டார். அதுவும் அணியில் மற்ற வீரர்கள் அதிரடி காட்டினாலும், தான் தூண் போல நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்ற பொறுப்பை உணர்ந்துக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
குழப்பத்திற்கு தீர்வு
இந்திய அணியில் இருந்த மிகப்பெரிய குழப்பம் தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு என்பது தான். அதற்கு விடை கிடைத்துவிட்டது. ஆஸ்திரேலிய தொடரில் தினேஷ் கார்த்திக்-ஐ பயன்படுத்திய ரோகித் வெற்றி கண்டுள்ளார். குறிப்பாக 2வது டி20 போட்டியில் இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்த போது, தான் சந்தித்த 2 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு ஃபோரை அடித்து வெற்றி தேடி கொடுத்தார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பையிலும் இவருக்கு தான் வாய்ப்பு என்பது உறுதியாகியுள்ளது.
நம்பிக்கை நாயகன்
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு செட்டாகிவிட்டது என்று கூறலாம். யுவேந்திர சாஹல் ஓரளவிற்கு எகானமியாக வீசும் நிலையில், மறுபுறம் அக்ஷர் பட்டேல் விக்கெட் டேக்கராக இருக்கிறார். இந்த தொடரில் 8 விக்கெட்களை கைப்பற்றி தொடர் நாயகன் விருதையும் பெற்றார். ஜடேஜாவுக்கு நல்ல மாற்று தேடி வந்த சூழலில் சரியாக பொருந்தியுள்ளார். இதெல்லாம் இந்தியாவின் பலம். ஆனால் பலவீனமே வேகப்பந்துவீச்சு தான்.
பவுலிங் தான் பலவீனம்
இந்தியாவின் முதன்மை பவுலரான புவனேஷ்வர் குமார், டெத் ஓவர்களில் ரன்களை மீண்டும் ஒருமுறை வாரி கொடுத்துள்ளார். பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் வந்தால் சரியாகிவிடும் என கூறினர். ஆனால் அவர்கள் இருவரின் ஓவர்களும் அடித்து நொறுக்கப்பட்டன. 3வது டி20ல் பும்ரா மட்டுமே 50 ரன்களை வாரி கொடுத்தார். இதன் மூலம் இந்தியா வேகப்பந்துவீச்சில் மிக மோசமான நிலையில் உள்ளது உறுதியாகியுள்ளது. எனவே உடனடியாக அதனை சரிசெய்தாக வேண்டும்.