மிக மிக இளம் அணி
துடிப்புமிக்க இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என்று உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நிபுணர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் வகையில்,தோனி தலைமையிலான இந்திய அணி தனது முதல் இருபதுக்கு 20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்று சாம்பியன்களாக மாற, அனைத்து முரண்பாடுகளையும் , விமர்சனங்களையும் தவிடு பொடியாக்கி சாதனை படைத்தது.
வரலாற்று சாதனை
இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்றது இந்திய அணி. அப்பொழுது கேப்டனாக செயல்பட்ட தோனி, கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்தார். அதுதான் அவர் சூடிய முதல் பெரும் மகுடம்.
முக்கிய வீரர்கள்
தோனி, யுவராஜ் சிங், வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் இந்த டி20 போட்டிகளில் வென்று இறுதி போட்டிக்கு செல்ல ஒரு முக்கிய காரணமாக இருந்தனர். இதர இந்திய அணியினரும் உறுதுணையாக இருந்தனர். ஆனால் அனைத்திற்கும் மேலாக தோனியின் கேப்டன்சிதான் இதற்கு மிகப்பெரிய காரணம்.
கடந்து வந்த பாதை
இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் பிரிவு ஆட்டத்தில் இரு அணியினரும் சமமாக ஸ்கோர் செய்ய பௌல் அவுட் முறை நடத்தப்பட்டது. அப்பொழுது தொடர்ச்சியாக மூன்று சந்தர்ப்பங்களில் மிஸ் செய்யாமல் ஸ்டம்புகளைத் தாக்கி இந்திய அணி வெற்றி வாகை சூடியது. ஆனால் பாகிஸ்தான் மூன்று பந்துகளையும் மிஸ் செய்தது.
யுவராஜின் ஆறு சிக்ஸர்கள்
இந்திய அணி நியூசிலாந்திடம் லீக் போட்டியில் தோற்று ஒரு பின்னடைவை சந்தித்தது. ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ஸ்டுவர்ட் போர்ட் ஓவரில் யுவராஜ் சிங்கின் தொடர்ச்சியான ஆறு சிக்ஸர்கள் ஒரு அற்புதமான வெற்றிக்கு அடித்தளத்தை அமைத்தது. இதுதான் அந்த தொடரில் இந்திய அணி அரை இறுதிக்குள் நுழைய காரணமாக அமைந்தது.
ஆஸ்திரேலியாவுடன் வெற்றி:
அன்று வலிமையாக கருதப்பட்ட தென்னாப்பிரிக்காவை லீக் போட்டியில் தோற்கடித்து டர்பனில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இந்தியா விளையாட சென்றது. உலகக் கோப்பை சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட்டத்திலும் வென்று இந்தியா அசால்ட்டாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
இறுதி போட்டி
மீண்டும் பாகிஸ்தான் உடனான இறுதி போட்டியில் அனல் பறந்தது. கவுதம் கம்பீர் சிறப்பாக பேட் செய்ய 54 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து இந்தியாவின் ஸ்கோரை 157 ஆக உயர்த்தது. இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியின் பௌலர்கள் மிகவும் அச்சுறுத்தல் தந்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை எடுத்தனர்.
மிரட்டிய மிஸ்பா
விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்து கொண்டு இருக்க மிஸ்பா-உல்-ஹக் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். 6 பந்துகள் 13 ரன்கள் தேவை என்ற நிலையில் அனுபவ வீரர் ஹர்பாஜன் சிங்கிற்கு பௌலிங் தருவார் தோனி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எப்பொழுதும் வித்தியாசங்களை புகுத்தி பல விசித்திரங்களை படைக்கும் தோனி யாரும் எதிர்பார்க்காதவகையில் ஜோகிந்தர் ஷர்மாவிற்கு பந்தை கொடுத்து போட சொன்னார்.
ஜோகிந்தர் ஷர்மாவின் கடைசி ஓவர்
ஆனால் ஜோகிந்தர் ஷர்மா முதல் பந்தே வைட் போட்டு அதிர்ச்சி அளித்தார். மேலும் அவர் வீசிய 3 வது பந்தில் மிஸ்பா-உல்-ஹக் ஒரு சிக்ஸர் அடித்து அனைத்து இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்தார். இதனால் இந்தியா தோற்றுவிடமோ என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
தோனி எப்படி
பின் தோனி ஜோகிந்தர் ஷர்மாவிடம் சென்று "நீ எதை பற்றியும் கவலை படாமல் உன் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் செய்" என்று கூறி வந்தார். அடுத்து ஜோகிந்தர் ஷர்மா என்ன மாதிரியான பந்து போட போகிறார்? என்ன நடக்க போகிறது? என்று ரசிகர்கள் குழம்பிய நிலையில் அவரின் அடுத்து பந்து அனைவரது வயிற்றிலும் பாலை வார்க்கும் விதத்தில் அமைந்தது.
இந்தியா வெற்றி
ஆம் ஜோகிந்தர் ஷர்மா வீசிய ஸ்கூப் பந்தை மிஸ்பா-உல்-ஹக் ஆட, பந்து மேலை செல்ல அனைவரும் சிக்ஸர் என்று தலையில் கை வைத்த நிலையில், உயர சென்ற பந்து நேராக ஸ்ரீசாந்தின் கைகளில் சிக்கியது. இந்திய அணி முதன் முறையாக டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
மறக்க முடியுமா
அந்த நிகழ்வு நடைபெற்ற நாள் செப்டம்பர் 24 2007. அனைத்து இந்தியர்களும் பெருமை கொண்ட அந்த நாள் இன்றும் மறக்க முடியாத நாளாக தான் வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க டி 20 உலக கோப்பை வென்று தந்த இந்திய அணி வீரர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை சொல்ல தயார் ஆகிட்டீங்களா மக்களே??