நாடு முழுவதும் வீசிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக, கடந்த ஏப்ரம் மாதம் தொடங்கிய ஐபிஎல் 2021 தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக தொற்று உறுதி செய்யப்பட, அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் கொரோனா பரவத் தொடங்கியது. இந்நிலையில், அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பகுதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (செப்.22) கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்த சூழலில், ஹைதராபாத் அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த அணிக்கு பின்னடைவு என்பதைத் தாண்டி, இது மன ரீதியாக நடராஜனுக்கு நிச்சயம் பெரும் வேதனையாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கொரோனா காரணமாக, ஐபிஎல் 2021 முதல் பாதி மே மாதம் நிறுத்தப்படுவதற்கு முன்பே, முழங்கால் காயம் காரணமாக தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து விலகியிருந்தார். வெறும் 2 ஆட்டங்களில் மட்டுமே ஆடியிருந்த நடராஜனுக்கு நாளுக்கு நாள் காயத்தின் வீரியம் அதிகரித்தது. நடராஜனுக்கு ஏற்பட்ட முழுங்கால் காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமாகாமல் தான் இருந்தார். என்சிஏவில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றுத் திரும்பிய நடராஜன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டி20, ஒருநாள் போட்டியில் விளையாடினார். இருப்பினும் அவர் 100 சதவீதம் தகுதியாக இல்லை. இதனால், ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் பங்கேற்றவுடன் மீண்டும் முழங்கால் வலி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரலில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மே மாதம் முதல் அவர் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவில்லை. தொடர்ந்து ஓய்வில் தான் இருந்தார். இதனால், கடந்த ஆண்டு மிக சிறப்பாக விளையாடியும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், காயம் அனைத்தும் குணமாகி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி தனது திறமையை மீண்டும் நிரூபிக்க அவர் பேரார்வத்துடன் இருந்தார். இதனால், அவர் மிகத் தீவிர பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். ஐபிஎல்-ல் சிறப்பாக விளையாடினால் உலகக் கோப்பைக்கு பிந்தைய தொடர்களில் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்பதால், அதனை நோக்கி பயிற்சி மேற்கொண்டார். ஆனால், இப்போது போட்டிக்கு முன்பே அவருக்கு கொரோனா தொற்று உறுதியாக மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இன்னும் குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் அவர் கட்டாய ஓய்வில் இருந்தாக வேண்டும். இதனால், அவர் 3 - 4 போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
பட்ட காலிலேயே படும் என்பது இதுதானா!
BREAKING: டி.நடராஜனுக்கு கொரோனா உறுதி.. மீண்டும் ரத்தாகிறதா ஐபிஎல் தொடர் - 6 வீரர்கள் தனிமை!