அரையிறுதி போட்டி
கடந்த நவ. 10ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. கடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு நியூசிலாந்து பழிதீர்த்துக் கொண்டது. 2ஆவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் சொதப்ப ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிப் போட்டி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறும் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளும் 5 போட்டிகளில் 4 வென்று இரண்டாம் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றவர்களாகும். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து என இரு அணிகளுமே தங்கள் முதல் டி20 உலகக் கோப்பையை வெல்ல ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
அந்த 3 போட்டிகள்
நாளைய போட்டியிலும் டாஸ் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பவுலிங்கையே தேர்ந்தெடுக்கும். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த காலங்களில் 2 அணிகளும் மோதிய சில முக்கிய போட்டிகளைக் குறித்து ஒரு சின்ன ரிகேப்.
1974 கிறிஸ்ட்சர்ச் போட்டி
கடந்த 1974ஆம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து பெற்ற முக்கியமான வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கிளென் டர்னர் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடிக்க ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை நியூசிலாந்து பதிவு செய்தது.
1981 மெல்போர்ன் போட்டி
இந்த போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. சர்ச்சைக்குரிய ஒரு நாள் போட்டிகளில் இதுவும் முக்கியமானது. இந்த போட்டியில் கடைசி பந்தில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆஸ்திரேலிய கேப்டன் கிரெக் சேப்பல் அறிவுரைப்படி ட்ரெவர் கடைசி பந்தை அண்டர் ஆர்வமாக வீச நியூசிலாந்து அணி தோல்வியைத் தழுவியது. ஆஸ்திரேலிய அணியின் இந்த செயலால் கடும் கோபமடைந்த நியூசிலாந்து வீரர் டெய்லண்டர் பிரையன் மெக்கெக்னி தனது பேட்டை மைதானத்திலேயே தூக்கி எறிந்தார்,
அரசியல் தலைவர்கள்
கிரெக் சேப்பலின் கொடுத்த அறிவுரை சர்வதேச அளவில் மிகப் பெரியளவில் விமர்சனங்களை எழுப்பியிருந்தது. கிரிக்கெட் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கூட இந்த கிரெக் சேப்பலை விமர்சித்தனர். அப்போது நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ராபர்ட் முல்டூன், "இது உண்மையிலும் கோழைத்தனமான செயல் . ஆஸ்திரேலிய அணி மஞ்சள் நிற ஜெர்சிக்கு மிகப் பொருத்தமான செயல்தான் இது" என்று விமர்சித்தார்.
2015 ஆக்லாந்து போட்டி
கடந்த 2015இல் ஈடன் பார்க்கில் நடந்த 2015 உலகக் கோப்பை லீக் போட்டி வரலாற்றில் மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும். அதில் ட்ரென்ட் போல்ட்டின் அற்புதமான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்துக் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு அரைசதம் அடித்து பிரெண்டன் மெக்கல்லம் சிறப்பான தொடக்கத்தை அளித்தார். ஆனால் மிட்செல் ஸ்டார்க் நியூசிலாந்திற்கு பெரும் ஷாக் கொடுத்தார். வெறும் 28 ரன்களை விட்டுக்கொடுத்த 6 விக்கெட்டுகளை சாய்த்தார். கடைசி வரை களத்தில் இருந்த கேன் வில்லியம்சன் 45 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். சூப்பர் ஃபார்மில் உள்ளதால் அண்டை நாடுகளுக்கு இடையே மீண்டு ஒரு சுவாரஸிய போட்டி நாளை அமைந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.