இந்தியா பாகிஸ்தான் போட்டி
மிகவும் விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் கேப்டன் கோலி அதில் அரைசதம் அடித்தார். அதேபோல ரிஷப் பந்த்தும் கணிசமான ரன்களை குவித்தார். ஆனால், இவர்கள் இருவரைத் தவிர மற்ற பேட்ஸ்பேன்களால் பெரியளவில் ரன்களை குவிக்க முடியவில்லை.
பாகிஸ்தான் வெற்றி
அடுத்துப் பேட் செய்த பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரையும் அவுட் ஆக்க இந்தியா எடுத்த முயற்சி கடைசி வரை பலன் தரவில்லை. பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபார் அசாம் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர். இறுதியில் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதுவே முதல்முறை
உலகக் கோப்பை தொடர் ஒன்றில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோற்பது இதுவே முதல்முறையாகும். இதனால் அரையிறுதிக்குச் செல்ல அடுத்த போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியா தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை வரும் அக். 31ஆம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியிலும் தோற்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறி ஆகிவிடும்.
பிளேயிங் 11
இப்படியொரு இக்கட்டான சூழலில் இந்தியா உள்ளதால், அடுத்து வரும் போட்டியில் பிளேயிங் 11ஐ மிகத் துல்லியமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் சூப்பர் 12 சுற்றுடன் பெட்டியைக் கட்ட வேண்டியது தான். இப்படியொரு இக்கட்டான சூழலில் உள்ளதால், அடுத்து வரும் போட்டிகளில் மிகச் சரியான பிளேயிங் 11ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். அணியில் தற்போது உள்ள இந்த 3 பேருக்குப் பதிலாக மாற்று வீரர்களைக் களமிறக்கினால் பிளேயிங் 11 இன்னும் சற்று வலுவானதாக மாறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்,
ஹரித்திக் பாண்டியா - இஷான் கிஷன்
ஆல் ரவுண்டர் ஹரித்திக் பாண்டியாவால் காயத்திற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே முறையாகப் பந்துவீச முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் 35 போட்டிகளில் பங்கேற்ற அவர் வெறும் 6 போட்டிகளில் மட்டுமே பந்துவீசியுள்ளார். பேட்டிங்கிற்காக அவரை தேர்வு செய்துள்ளனர் என்று வைத்துக்கொண்டாலும் கூட அவரால் அதிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடிவதில்லை. பாக். எதிரான போட்டியில் 11 பந்துகளில் வெறும் 8 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார். இதனால் அவருக்குப் பதிலாக சூப்பர் பார்மில் உள்ள இஷான் கிஷனுக்கு வாய்ப்பு தரலாம். பயிற்சி போட்டிகளிலும் கூட அவர் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தார்.
ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு
அதேபோல வேகபந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரும் சமீப காலமாக ஃபார்மில் இல்லை. அவரது பந்துவீச்சை எதிரணி எளிதாக விளாசித் தள்ளுகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலும் கூட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 11 போட்டிகளில் விளையாடி வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே அவர் சாய்த்திருந்தார். இதனால் அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு தரலாம். அது அணியின் பந்துவீச்சுக்கு பலம் சேர்க்கும்.
ரவிச்சந்திரன் அஷ்வின்
இந்தியாவின் X ஃபேக்டராக இருப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகப் பந்துவீச முடியவில்லை. ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவரால் உலகக் கோப்பையிலும் அதே ஃபார்மை தொடர முடியவில்லை. 4 ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி விக்கெட் ஏதுவுமின்றி 33 ரன்களை விட்டுக்கொடுத்தார். எனவே, அவருக்குப் பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு தரலாம். அனுபவம் வாய்ந்த அவரது பந்துவீச்சு அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.