முதல் சுற்றுப் போட்டிகள்
அக்டோபர் 17 முதல் தொடங்கும், டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. அக்டோபர் 17ம் தேதி தொடங்கி, நவம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் (தகுதி சுற்று மட்டும்) நடைபெறுகிறது. முதல் சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகள் அனைத்தும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும். இதில் வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பாப்புவா நியூ கினியா ஆகிய 8 அணிகள் இரு குழுக்களாக பிரிந்து மோதுகின்றன. இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெறும்.
இந்தியா - பாகிஸ்தான்
குரூப் 1-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், வின்னர் குரூப் ஏ, ரன்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. அதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ரன்னர் குரூப் ஏ, வின்னர் குரூப் பி ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இதில், இந்திய அணி வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடைபெறும் ஆட்டத்தில், மாலை 6 மணிக்கு பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது இத்தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறகு பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.
ரசிகர்கள் அதிருப்தி
ஐசிசி இப்படிபட்ட விருந்தினை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தாலும், அதன் மீது இந்திய ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதற்கு காரணம் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மைதானங்கள் தான். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா, துபாய், அபுதாபி என 3 இடங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஒரு போட்டி கூட சார்ஜா மைதானத்தில் நடைபெறும் வகையில் ஐசிசி அமைக்கவில்லை.
என்ன காரணம்
சார்ஜா மைதானமானது பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கம் என்றே கூறலாம். ஏனென்றால் அந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியது என்பதால், சிக்ஸர் மழை பொழிந்து ஆட்டம் அனல் பறக்கும். எவ்வளவு பெரிய பவுலராக இருந்தாலும் விக்கெட் எடுப்பது என்பது அங்கு கடினம். கடந்த 2021ம் ஆண்டு அங்கு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட அந்த மைதானத்தில் தான் அதிக ஸ்கோர் ஆட்டங்கள் நடைபெற்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அந்த மைதானத்தில் தான் 224 என்ற இலக்கை அசால்ட்டாக 19.3 ஓவர்களிலேயே எட்டியது. இந்த மைதானத்தில் தான் மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களை விளாசினார்.
ஏமாற்றம்
எனவே இந்திய அணியிலும் தற்போது அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்திருப்பதால், சார்ஜா மைதானம் மட்டும் கிடைத்தால், ஆட்டம் தூள் பறக்கும். அதுவும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை அங்கு நடத்தியிருந்தால் எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இருந்திருக்காது. ஆனால் அப்படி நடக்கவில்லை. எனவே ஐசிசி கண்டிப்பாக இந்தியாவுக்கு அங்கு போட்டியை நடத்தியிருக்க வேண்டும். தவறு செய்து ஏமாற்றிவிட்டது என ஆதங்கத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.