இந்தியாவின் சொதப்பல்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீப காலமாக சொதப்பி வருகிறது. ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டிக்கு கூட செல்லவில்லை. ஆஸ்திரேலிய தொடரிலும் பவுலிங் மோசமாக உள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பையில் என்ன ஆகவுள்ளது என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
சவுரவ் கங்குலி பேச்சு
இந்நிலையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அதில், கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை, நடப்பாண்டு ஆசிய கோப்பையில் இந்தியா சொதப்பியது உண்மைதான். இதுகுறித்து கேப்டன் மற்றும் பயிற்சியாளர் டிராவிட்டுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்கள் இருவரும் இதே கவலையில் தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனவே இனி பிரச்சினைகள் சரியாகிவிடும்.
டி20 உலகக்கோப்பை
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இரண்டரை வாரத்திற்கு முன்பே இந்திய வீரர்கள் அங்கு சென்றுவிடுவார்கள். பெர்த் நகரத்தில் பயிற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே டி20 உலகக்கோப்பையை வெல்வார்கள் என நம்புகிறேன். அப்படி நடக்க வேண்டும் என்றால் ஓரிரண்டு வீரர்கள் சிறப்பாக ஆடினால் போதாது. விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே முடியும்.
அதை பாருங்கள்
வெற்றி, தோல்வி என்பது விளையாட்டில் சகஜமான ஒன்று தான். சமீபத்தில் இந்திய அணி தோல்விகளை சந்தித்திருக்கலாம். ஆனால் ரோகித் சர்மாவின் கேப்டன்சி ரெக்கார்டை பாருங்கள். டி20 கிரிக்கெட்டில் 82 சதவீத வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். வெகு சில போட்டிகளில் மட்டுமே தோல்வி பெற்றுள்ளார் என கங்குலி கூறியுள்ளார்.