இந்திய அணி அறிவிப்பு
விராட் கோலி தலமையிலான இந்திய அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார். நட்சத்திர ஜோடியான யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தையும் விட பெரிய ஆச்சரியம் என்னவென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டது தான்.
ரசிகர்கள் கேள்வி
பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் விராட் கோலி ஆகியோர் முடிவெடுக்க உள்ளனர். இதே போல பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என தனித்தனியாக பயிற்சியாளர்கள் உள்ளனர். இப்படி இருக்க ஆலோசகராக கேப்டன் தோனியின் தேவை அணியில் என்ன என்பது குறித்து ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் அவரை திடீரென இந்திய அணியில் அழைத்ததற்கான காரணம் குறித்து கேட்டு வந்தனர்.
விளக்கம்
இந்நிலையில் அவற்றிற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி விளக்கம் கொடுத்துள்ளார். 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு ஐசிசி தொடரையும் இந்திய அணி வெல்லவில்லை. டி20 போட்டிகளில் தோனிக்கு நல்ல அனுபவம் உள்ளது. எனவே உலகக் கோப்பையை வெல்ல மட்டுமல்ல அவரால் நிச்சயம் இந்திய அணிக்கு பெரிய அளவில் பங்காற்ற முடியும்.
கங்குலி நம்பிக்கை
தோனியின் இந்த பதவியும், தோனியின் அனுபவமும் நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் அனுகூலமாக இருக்கும். இந்திய அணிக்கு அவருடைய ஆலோசனைகள் கண்டிப்பாக உதவும். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக் 2019 ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அணியின் ஆலோசகராக செயல்பட்டார். அது ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதல் அனுகூலமாக அமைந்தது. அதே போன்று தான் தோனியின் பங்களிப்பும் இருக்கும்.